செஸ் ஒலிம்பியாட்! தமிழ்நாட்டிற்கு வர வேண்டும்! பிரதமர் மோடிக்கு 19-ஆம் தேதி தமிழக அரசு அழைப்பிதழ்!
சென்னை: சென்னையில் ஜூலை 28-ஆம் தேதி தொடங்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க நேரில் வருமாறு பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் வரும் 19-ஆம் தேதி அழைப்பிதழ் கொடுக்கப்படுகிறது.
திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகிய நான்கு பேரும் முதலமைச்சர் ஸ்டாலினின் பிரதிநிதிகளாக பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுக்கவுள்ளனர்.
பிரதமர் ஜூலை 28-ஆம் தேதி சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் அது தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

செஸ் ஒலிம்பியாட்
187 நாடுகளில் இருந்து வீரர்கள், பார்வையாளர்கள் தமிழகம் வருகை தரவுள்ளதால் முன்னேற்பாடு பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்த 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரம்மாண்ட விழா
பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், 52,000 சதுர அடியில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக நவீன உள் விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சர்வதேச சதுரங்க போட்டிக்கான தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

பிரதமருக்கு அழைப்பு
அதில் பங்கேற்க நேரில் வருமாறு பிரதமர் மோடியை ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டிருந்தார். இந்நிலையில் தனது பிரதிநிதிகளாக திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகிய நான்கு பேரையும் டெல்லிக்கு அனுப்பி வைத்து வரும் செவ்வாய்கிழமை அன்று ஜூலை 19-ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கான அழைப்பிதழ் கொடுத்து அனுப்புகிறார்.

வருகை உறுதி
முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்னை வருகை தருவது உறுதியாகியுள்ளது. இதனால் இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பிரதமர் மோடியை வரவேற்க பாஜக தரப்பில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications