நோயாளிகளை தேடி நேரடியாக வரப்போகும் ரெம்டெசிவர் மருந்து.. தமிழக அரசு தொடங்கியது இணைய சேவை!
சென்னை: தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்து முன்பதிவு செய்வதற்கான தமிழக அரசின் இணைய சேவை தொடங்கி உள்ளது. தனியார் மருத்துவமனைகள் தொற்றாளர்களின் விவரங்களோடு http://tnmsc.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளை தேடி ரெம்டெசிவிர் மருந்து வரப்போகிறது.
Recommended Video
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக போதிய அளவில் வழங்கப்பட்டு வந்தது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும், சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வந்தது.
இந்த மருந்தை பல மருத்துவர்களும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்த காரணத்தால், ரெம்டெசிவிர் இருந்தால் தான் தங்கள் குடும்பத்தினர் உயிர் பிழைப்பார்கள் என்ற ந்ம்பிக்கை நோயாளிகளின் குடும்பத்தினர் மத்தியில் ஆழமாக பதிந்தது. இதன் காரணமாக மருந்தை வாங்க தினமும் ஆயிரககணக்கானோர் ரெம்டெசிவிர் மருந்து வாங்க கீழ்பாக்கத்திலும், சேலம், கோவை, திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட ஊர்களில் கால்கடுக்க நிற்க தொடங்கினர்.
பலன் இல்லை
ரெம்டெசிவிர் மருந்து ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிறிது பலன் தருவதாகவும், மற்ற நோயாளிகளுக்கு இதனால் பெரிய அளவில் பலன் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனமும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்திருந்த நிலையில், அதை வாங்க பலரும், ஆர்வம் காட்டினர். அதை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பது நடக்க தொடங்கியது.
கூட்டம் கூடினர்
நமது நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினரிடம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வந்தது.. இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிகக் கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கமுடியாத சூழல் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அதனைத் தவிர்க்க வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
ஸ்டாலின் ஆய்வு
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் (16-5-2021), தமிழ்நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார்.
சிரமத்தை குறைக்க நடவடிக்கை
அதன் பின்னர் பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், கடந்த வாரம் வரை இருந்த நடைமுறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்தை வழங்கிட வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும், நோயாளிகளின் குடும்பத்தினருக்கு இந்த மருந்தை வாங்குவதற்கான சீட்டை அளித்து, அவர்களை வாங்கிடப் பணிக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
அரசு அறிவுறுத்தல்
இதன்படி, இன்று 18-5-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை http://tnmsc.tn.gov.in இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வரும் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கண்காணிக்கும்
இன்று முதல் வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும் பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச் சந்தையில் இவை விற்பனை செய்யப்படாதவாறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். நோயாளிகளுக்குத் தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீதும், மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர் மீதும், சட்டப்படியான நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொள்ளும் என அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது.