உயர்த்தப்பட்ட காய்கறி விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும்.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை
சென்னை: ஊரடங்கை காரணம் காட்டி உயர்த்தப்பட்ட மளிகை மற்றும் காய்கறி விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும்
என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. . காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கடுமையாக எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதுவரை இல்லாத ஒரு அறிவிப்பாக காய்கறி மற்றும் மளிகை கடைகள் இயங்கவும் ஒரு வார காலத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.
அதேநேரம் தோட்டக்கலை துறை மூலம் காய்கறிகளை வீடுகளுக்கே வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சத்தில் மக்கள்
எனினும் மளிகை பொருட்கள் தங்களுக்கு கிடைக்காமல் போகுமா என்ற அச்சத்தில் மொத்தமாக வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதேபோல் காய்கறிகளையும் மொத்தமா வாங்கி வைத்துக்கொள்ள மக்கள் விரும்புகிறார்கள்

காய்கறி விலை
இன்று ஒரு நாள் வேண்டியதை வாங்கி கொள்ளலாம் என்ற அரசின் அறிவிப்பின் காரணமாக காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் கடைகளில் மக்கள் கூட்டம் இன்று அலைமோதுகிறது. இதன் காரணமாக நேற்று வரை மிக குறைவான விலைக்கு விற்பனையாகி வந்த காய்கறிகளின் விலைகள் மிக மிக கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி, வெங்காயம், தேங்காய், கேரட், பீட்ரூட், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்பட பல்வேறு காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அமைச்சர் எச்சரிக்கை
இந்நிலையில் உயர்த்தப்பட்ட மளிகை மற்றும் காய்கறி விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும்
என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி காய்கறி கடைகள் மற்றும மளிகை கடைகளை எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பெருந்தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட அரசு நாளை (24.5,2021) முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. மக்களின் உயிர்காக்கும் பொருட்டும் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தவம் இந்த நடவடிக்கை அனைத்துத் தரப்பினரையும் ஆலோசித்து எடுக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரிப்பு
தவிர்க்க இயலாத இந்த நடவடிக்கையை மக்கள் ஏற்று ஒத்துழைப்பு தரும் இவ்வேளையில், சில வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இந்த இக்கட்டான நிலையினை பயன்படுத்தி காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது, இது மக்களை சுரண்டும் ஒரு செயல். இவ்வாறாக உயர்த்தப்பட்ட விலையினை உடனடியாக வழக்கமான விலைக்கு குறைக்க வணிகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒத்துழைப்பு தாருங்கள்
இதுகுறித்து சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். அவ்வாறு நடவடிக்கை ஏற்படம் சூழ்நிலை நிகழாத வண்ணம் வணிகர்களும் தனியார் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications