குட் நியூஸ்.. புதிய அரிசி ரேஷன்கார்டு வைத்துள்ளோருக்கும் ரூ.2000 நிதியுதவி- தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே ரேஷன் கடைகள் வாயிலாக டோக்கன் கொடுத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணத் தொகையை ஸ்டாலின் அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசு இன்று இந்த சலுகையை நீட்டித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேர்தல் அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தல்-2021 தொடர்பாக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கொரோனா தொற்றால் செயல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் கருணாநிதி பிறந்த திருநாள் முதல் ரூ-4000/- வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியளித்திருந்தார்கள்.
நோய் பரவல் தடுப்பு
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முதல் தவணை பணம்
இந்நிலையில், கொரோளா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே 2021 மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ2000/- நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க ஏற்கெனவே முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
புதிய ரேஷன் அட்டை
இதனைத் தொடர்ந்து, தற்போது நடைமுறைக்கு வந்துள்ள, 2 லட்சத்து 14,950 புதிய அரிசி குடும்ப அட்டைகளை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்திற்கும் மேற்கூறிய உதவியை வழங்கிடும் வகையில், ரூ.42.99 கேளடி செலவில் மே 2021 மாதத்தில் ரூ.2.000/- நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.