இருப்பை விட அதிகம்.. இதெல்லாம் வேறலெவல்! தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம்.. மா.சு.வின் செம்ம விளக்கம்
சென்னை: இருப்பைவிட அதிகமாக தடுப்பூசி செலுத்தி உள்ளோம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்துள்ள விளக்கம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு நிர்வாகத் திறமையுடன் மிகச் சாமர்த்தியமாக, ஒரு வயலில் இருந்து 11 பேருக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்,. ,
Recommended Video
ஒரு தடுப்பூசியைப் பயன்படுத்தும் போது நிச்சயமாக 11 பேர் இருப்பதை உறுதி செய்துவிட்டு செலுத்துவதால் தடுப்பூசி வீணாவதில்லை. என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தடுப்பூசியை பொறுத்தவரை மொத்தம் 35 கோடி பேருக்கு போடப்பட்டதாக மத்திய அரசு சொல்லிக்கொண்டிருக்கிறது.தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை பெறப்பட்ட தடுப்பூசிகளின் அளவு 1கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 550 ஆகும்.

தடுப்பூசி
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கடந்த 21ம் தேதியில் இருந்து இந்தியாவில் தயாராகிற ஒட்டுமொத்த தடுப்பூசிகளின் அளவில் 75 சதவீதத்தை அவர்களே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு பிரித்து விநியோகம் செய்வோம் என்று சொன்னார்கள். அந்த வகையில் ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் வயிலாகவும், நேரடியாகவும் சென்று தடுப்பூசி கூடுதலாக வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். திமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை குழுவின் தலைவர் டிஆர் பாலுவிடமும் மத்திய அமைச்சரவை சந்தித்து தடுப்பூசிக்காக கோரிக்கை வைக்க சொன்னார்கள். என்னையும் டெல்லிக்கு சென்று தடுப்பூசிக்காக கோரிக்கை வைக்க சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 9ம் தேதி டெல்லிக்கு சென்று தடுப்பூசிக்காகவும் எய்ம்ஸ் மருத்துவனை தொடர்பாகவும் நான் வலியுறுத்த உள்ளேன்.

கேள்வி கேட்கிறார்
இந்த நிலையில், 1,57,76,550 தடுப்பூசிகள் வந்திருந்தாலும், நேற்று முன்தினமும் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார். எவ்வளவு தடுப்பூசிகள் வந்தன, எவ்வளவு செலுத்தினீர்கள், எவ்வளவு மிச்சமாயின எனப் பல கேள்விகளைத் தொடர்ச்சியாகக் கேட்டுள்ளார். நாங்களும் அவருக்குத் தொடர்ந்து பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

தடுப்பூசிகள் வீணானது எவ்வளவு
இதுவரை, 1,57,76,550 தடுப்பூசிகள் வந்துள்ளன. நேற்று இரவு வரை 1,58,78,600 செலுத்தியிருக்கிறோம். கையிருப்பில் 63,460. 1.75 லட்சம் தடுப்பூசிகள். எப்படிக் கூடுதலாக வந்தன எனக் கேட்கலாம். தமிழகத்தில் ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வரும் வரை 3.5-4 லட்சம் வரை தடுப்பூசிகள் வீணாகிவிட்டதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறியப்பட்டது. தமிழகத்தில் தடுப்பூசிகளை வீணடித்துவிட்டதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன

கூடுதலாக போட்டுள்ளோம்
அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, வீணான 3.5 லட்சம் தடுப்பூசிகளையும் சேர்த்து, 1.75 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக இருக்கும் வகையில், நிர்வாகத் திறமையுடன் கூடுதலாகச் செலுத்தியிருக்கிறது. ஒரு 'வயலில்' (Vial) 10 பேருக்குத் தடுப்பூசி என்றால், மருந்தின் அளவைக் குறைத்துப் பலருக்கும் போடப்படுகிறதா என்று கேட்கலாம். மருந்தின் அளவில் குறைவேதும் இல்லை. 5எம்எல் என்றால் ஐந்து எம்எல் தான். அதில் எந்த குறைவும் நிச்சயம் இருக்காது.

மா சுப்பிரமணியன் விளக்கம்
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி சொல்கிறேன். கோவிஷீல்டு, கோவேச்சின் உள்பட எந்த கொரோனா மருந்தாக இருந்தாலும், மருந்தைக் குப்பியில் அடைக்கும்போது 16-24% கூடுதலாக மருந்தை அடைக்கிறார்கள். அந்த மருந்தை தமிழக மருத்துவர்கள் மிகச் சாமர்த்தியமாக, ஒரு வயலில் இருந்து 11 பேருக்கு செலுத்தியிருக்கின்றனர். ஒரு தடுப்பூசியைப் பயன்படுத்தும் போது நிச்சயமாக 11 பேர் இருப்பதை உறுதி செய்துவிட்டு செலுத்துவதால் தடுப்பூசி வீணாவதில்லை.
தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவர மக்கள்தொகை, கொரோனா பாதிப்புக்கு ஏற்ப மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்படுகின்றன".இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications