நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. வேட்புமனு தாக்கல் தொடங்கியது.. கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடு!
சென்னை: தமிழ்நாட்டில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடந்து வருகிறது. 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கெத்தா..மாஸா..சின்னத்திரையில் களமிறங்கிய பாலாஜி முருகதாஸ்... ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
வேட்புமனு தாக்கல்
இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இன்று முதல் பிப்.4-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். நாளை சனிக்கிழமை வேலை நாள் என்பதால் அன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். கொரோனா பரவலுக்கு இடையே வேட்புமனு தாக்கல் செய்ய கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்பவர்களுக்கு பல பாதுகாப்பு அறிவுரைகள் விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா விதிகள்
முககவசம், கையுறை அணிந்து மட்டுமே வேட்புமனுவை பெற வேண்டும். மாஸ்க் இல்லாமல் வந்தால் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரே நேரத்தில் நிறைய வேட்பாளர்கள் வந்தால் டோக்கன் அளிக்கப்படும். டோக்கன் அடிப்படையில் வேட்புமனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா உள்ள வேட்பாளர்கள் முன்மொழிபவர்கள் மூலம் வேட்புமனு தாக்கல் செய்ய வசதி அளிக்கப்பட்டுள்ளது.
பரிசீலனை
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது பிப். 5-ல் பரிசீலனை நடைபெறும். அதே சமயம் வேட்புமனுக்களை திரும்ப பெற பிப்.7 கடைசி நாள் ஆகும். இன்று காலை வேட்புமனு தொடங்கிய நிலையில் சில நகராட்சி, மாநகராட்சிகளில் வேட்புமனு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்னும் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக,, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
வேட்பாளர்கள் பெயர்கள்
இதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நேற்றுதான் திமுக நடத்தியது. விரைவில் திமுக வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இன்று தனி தனியாக ஆலசோனை செய்ய உள்ளன. கூட்டணி ஆலோசனைகள் முடிந்த பின் கட்சிகள் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து, வேட்பு மனு தாக்கலை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.