மீண்டும் அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் உருவாகிட அனுமதிக்கக் கூடாது.. தாங்காது தமிழ்நாடு.. கமல்ஹாசன்
சென்னை: மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தமிழகம் தாங்காது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவில் ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அங்குள்ள அனல் மின் நிலையங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அங்கு கடும் மின்வெட்டு சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சீனா உலகம் முழுவதும் நிலக்கரியை வாங்கி குவிக்க தொடங்கியது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை கடுமையாக உயர்ந்தத. இதனால் மத்திய அரசு நிலக்கரி இறக்குமதியை கணிசமாக குறைத்துவிட்டது.
தற்போதைய நிலையில் நிலக்கரி கையிருப்பு என்பது 3 அல்லது நான்கு நாட்களுக்கு தான் தமிழகத்திடம் உள்ளது. வழக்கமாக வரும் அளவைவிட பாதி அளவுதான் நிலக்கரி மத்திய தொகுப்பில் இருந்து வருகிறது. இதனால் அனல் மின்நிலையங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல் நிற்கும் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகம் என்றில்லை. இந்தியா முழுவதுமே பல்வேறு மாநிலங்களில் இதுவே இன்றைய நிலையாக உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு உடனே தீர்வு காணாவிட்டால் டெல்லி, தமிழகம்,கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது.

தமிழகம் தாங்காது
இந்நிலையில் மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தமிழகம் தாங்காது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது : தமிழகத்தின் தினசரி மின் தேவை 14,000 மெகாவாட், கோடைக்காலத்தில் இது சுமார் 17,000 மெகாவாட் வரை உயரும். தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்கள் மூலமாக தினமும் 4,320 மெகாவாட் வரை மின் உற்பத்தி நிகழ்கிறது.

நிலக்கரி அவசியம்
அனல்மின் நிலையங்கள் தடையின்றி இயங்க, நிலக்கரி அவசியம். அனல்மின் நிலையங்களில், 14 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு வைத்திருப்பது வழக்கம். ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் வெறும் நான்கு நாட்களுக்கான நிலக்கரியே உள்ளதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகலாம் எனும் அச்சம், தொழிற்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சூழ்ந்துள்ளது.

மின்வெட்டு பிரச்சனை
கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் நிலவிய கடுமையான மின்வெட்டால், தமிழகத்தின் விவசாயமும் தொழிற்துறையும் மருத்துவச் சேவைகளும் கடுமையான பாதிப்புகளுக்குள்ளாகின. கோவை, திருப்பூர், கரூர், சிவகாசி போன்ற தொழில் நகரங்களின் பொருளியல் சிதைவுக்குள்ளாகின. பல தொழில் நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு தங்கள் தொழிலை மாற்றிக்கொண்டன. மீண்டும் அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் உருவாகிட அனுமதிக்கக் கூடாது.

கொரோனா நெருக்கடி
பொருளாதார மந்தநிலையாலும், கொரோனோ பெருந்தொற்றினாலும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வினாலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலத்திற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பண்டிகைக் கால விற்பனைக்கு வியாபாரிகள் தயாராகிவருகிறார்கள். மருத்துவமனைகளுக்கும், விவசாயிகளுக்கும் தடையற்ற மின்சாரம் அத்தியாவசியம். இந்தச் சூழ்நிலையில், மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் ஏற்பட்டால் தமிழகம் நிச்சயம் தாங்காது.

கமல் கோரிக்கை
தமிழக அரசு, தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும் நிலக்கரி இறக்குமதியை அதிகரித்து, அனல்மின் நிலையங்களுக்கு தங்குதடையின்றி நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications