குண்டு துளைக்காத கார் வைத்துள்ள பிரபல தாதா: சென்னை போலீஸார் குற்றப்பத்திரிக்கையில் தகவல்
சென்னை: சென்னையில், 32 குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சிடி மணி மீது, 142 பக்கத்திற்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சிடி மணி தனது பார்ச்சுனர் காரை டெல்லிக்கு அனுப்பி புல்லட் புரூஃப் காராக மாற்றியுள்ளார் என குற்றப்பத்திரிக்கையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை, தேனாம்பேட்டை, தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி சி.டி மணி(எ) மணிகண்டன் (38). இவர் மீது 10 கொலை வழக்குகள் உள்ளன.
மேலும், 8 ஆயுதத் தடைச் சட்டம் பிரிவின் கீழ் வழக்குகள், ஆள் கடத்தல், பணம் பறித்தல் உள்பட சுமார் 32 குற்ற வழக்குகள் உள்ளன. மூன்று முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனிப்படை போலீசார்
ஜாமீனில், சிறையில் இருந்து வெளியே வந்த சி.டி.மணி திடீரென தலைமறைவானார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி அன்று ,சி.டி.மணி போரூர் மேம்பாலம் பகுதியில் காரில் தப்பி சென்றார், அப்போது, தனிப்படை போலீசார் பிடிக்க சென்றபோது, சி.டி மணி துப்பாக்கியால் சுட்டதில், எஸ்.ஐ பாலக்கிருஷ்ணன் காயமடைந்தார். மேலும், தப்பிக்க முயற்சித்த சி.டி மணி, மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து, காயமடைந்தார், பின்னர், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்,

சிறையில் அடைப்பு
இச் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சி.டி.மணி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவரிடமிருந்து இரு உயர் ரக சொகுசு கார்கள், 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சி.டி.மணி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூன் 26ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

பூந்தமல்லி நீதிமன்றம்
இந்நிலையில் வளசரவாக்கம் இந்த வழக்குத் தொடர்பான 142 குற்றப்பத்திரிக்கையை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதன் விளைவாக இந்த வழக்கின் விசாரணை விரைவாக நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதல் தாதா
சிடி மணி புல்லட் புரூஃப் கார் வைத்துள்ளதாக கூறப்படுகறிது . டெல்லிக்கு தனது காரை அனுப்பி புல்லட் புரூஃப் காராக மாற்றியுள்ளாராம். பார்ச்சுனர் காரை டெல்லிக்கு அனுப்பி புல்லட் புரூஃப் காராக மாற்றியுள்ளார் என குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளனர். ஒரு தாதா தனக்காக புல்லட் புரூஃப் கார் வைத்துள்ளது தமிழகத்தில் இதுதான் முதல்முறை.












Click it and Unblock the Notifications