தை மாதத்தில் திடீர் மழை...5நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கு தெரியுமா
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த பின்னரும் திடீர் என்று பல பகுதிகளில் மழை பெய்து திக்குமுக்காட வைக்கிறது. பல பகுதிகளில் இன்று காலையில் திடீரென மேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. இன்று முதல் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாகவே கொட்டித்தீர்த்தது. அணைகள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் தண்ணீர் ஓடிக்கொண்டுள்ளது.
4 வயது சிறுவனை கொலை செய்து.. பீரோவில் அடைத்து வைத்த கொடூர பெண்.. அப்படியே அரண்டு போன மக்கள்!
நடப்பாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்குப் பருவ காலத்தில் பெய்யும் மழையை காட்டிலும், 59 சதவீதம் அதிகமாக கிட்டத்தட்ட 71 சென்டிமீட்டர் மழை பெய்தது. சென்னையில் 136 சென்டிமீட்டர் மழை கிடைத்தது. இதன் காரணமாக வழக்கத்தை விட சென்னையில் 74 சதவிகிதம் அதிகம் வடகிழக்கு பருவமழையால் கிடைத்தது.
திடீர் மழை
இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வந்து விட்டதாக இரு தினங்களுக்கு முன்பு வானிலை மையம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. மீனம்பாக்கம், திருவள்ளூர், கட்டப்பாக்கத்தில் 2 செமீ அளவிற்கு மழை பெய்துள்ளது. பள்ளிப்பட்டு, மகாபலிபுரம், மணல்மேல்குடி, பூந்தமல்லி,இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் தலா 1 செமீ அளவிற்கு மழை பெய்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் மழை
இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பனியின் தாக்கம் குறைவாகவே இருந்த நிலையில் சாரல் மழையோடு தொடங்கி கனமழையாக பெய்தது. இன்றும் நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
27ஆம் தேதி வரை மழை
26ஆம் தேதி நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். வருகிற 27ஆஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில் மேக மூட்டம்
28ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர் ,திருச்சி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
தை மாதத்தில் மழை
அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதத்தோடு கனமழை முடிந்து விடும். மார்கழி மாதத்திலும் மழை கொட்டித்தீர்த்தது. வடகிழக்குப் பருவமழை விலகிய பின்னரும் தை மாதத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது வானிலை மையம்.