அடுத்த 3 மணிநேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை அடுத்த 3 மணிநேரத்துக்கு 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வந்தது. முதல் இரண்டு வாரங்கள் சென்னை உள்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.
அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து வருகிறது. அப்போது ஏற்படும் காலநிலை மாற்றத்தால் தான் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இரவோடு இரவாக.. எடப்பாடிக்கு போன அதிர்ச்சி செய்தி.. அஸ்திவாரத்தையே அசைத்த ஓபிஎஸ்.. என்ன நடந்தது?
2 நாள் மழை வாய்ப்பு
இந்நிலையில் தான் தமிழகத்தில் வீசும் கிழக்கு திசை காற்றால் இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 3ல் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தின் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3 மணிநேரம் முக்கியம்
இதன் தொடர்ச்சியாக தான் இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த கணிப்பில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
முன்னதாக மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டிசம்பர் 4ல் அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், திடீரென்று 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசலாம். இதேபோல் டிசம்பர் 5ல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், திடீரென்று 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசலாம் என்பதால் இங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். பின்னர், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 8-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நெருங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.