ஜல்லிக்கட்டு தடையும்..கொதித்து எழுந்த தமிழ் சமுதாயமும்...வீர விளையாட்டு மீண்டு வந்தது எப்படி?
சென்னை: ஏறுதழுவும் வீர இளைஞனுக்கு தேடி வந்து பெண் கொடுத்த காலம் உண்டு. தென் மாவட்டங்களில் விளையாடப்படும் மிகப்பெரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. பல நூறு ஆண்டுகளாக நாம் தவறாமல் நடத்தி வந்த ஜல்லிக்கட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில அமைப்புகளால் தடை செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது. தடைக்கு எதிராக தமிழகத்தில் கொதித்து எழுந்த இளைய சமுதாயம் மீண்டும் பாரம்பரிய விளையாட்டை மீட்டனர். வீர விளையாட்டு மீண்டு வந்ததன் கால பயணத்தை பார்க்கலாம்.
ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது. இவ்விளையாட்டு,முல்லை நில மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்பது தெரியுமா?. அதற்கு பல காரணங்கள் எல்லாம் இல்லை. ஒற்றை காரணம் தான். காட்சி விலங்குகள் பட்டியலில் காளை மாட்டை சேர்த்தது தான் ஜல்லிக்கட்டு மீதான தடைக்கான காரணம்.
ஸ்டாலினை நோக்கி நகரும் அன்புமணி.. அப்ப திருமாவளவன்?.. திமுக அந்த கட்சியை விடாது: ரவீந்திரன் துரைசாமி
ஜல்லிக்கட்டு காளைகள்
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், காளை மாடுகளை 2011 ஜூலை 11-ம் தேதி, காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்தார். அதாவது சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு ஆகிய வனவிலங்குகள் இடம்பெற்ற அந்த பட்டியலில், காளைகளையும் சேர்த்தனர். இதையடுத்து வனவிலங்குகள் பாதுகாப்புச்சட்டம் காளைகளுக்கும் அமலானது.
அதாவது இந்த விலங்குகளை பழக்கப்படுத்தி, பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்க வைப்பதோ, காட்சிப்படுத்தவோ கூடாது என்ற உத்தரவும் அமலானது. இதை அடிப்படையாக வைத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றம். தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்ட போதும், தடை நீங்காமல் போனதற்கு காரணம் இது தான்.
சிக்கலை ஏற்படுத்திய சட்ட விதி
2011ம் ஆண்டு காட்சி விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட உடன் சிக்கல்கள் துவங்கி விட்டன. அப்போதே விலங்கு ஆர்வலர்கள், பிராணிகள் நல வாரியம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு நெருக்கடி துவங்க ஆரம்பித்தது. ஆனால் அப்போதெல்லாம் விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி, அதைக்காரணம் காட்டி தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
காளைகள் காட்சிப்படுத்தல்
வனத்துறை பாதுகாப்பு சட்டத் தின்கீழ் வன விலங்குகளை அவற்றின் முக்கியத்துவத்தைப் பொறுத்தும், எண்ணிக்கையைப் பொறுத்தும் வகைப்படுத்தி 6 பிரிவாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற வன விலங்குகளை வேட்டையாடவோ, வேட்டையாட முயற்சித்தாலோ தண்டனைக்குரியதாக பார்க்கப்படு கிறது. அதுபோல், மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் மனிதர்களால் வதைபடுத்தப்படும் மற்றும் அதற்கான வாய்ப்புள்ள விலங்குகள் பட்டியலிடப்பட்டு, அவை காட்சிப்படுத்தப்பட்ட, காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் என பட்டியல் தயாரிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் தடை
ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனால், காளைகளை மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப்படுத்தப்பட்ட தடை விதிக் கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்த்தது. இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதித்தது. அதன்பின் கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடை பெறவில்லை.
இளைஞர்கள் போராட்டம்
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு தை பொங்கலுக்கும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதால் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள் கொந்தளித்தனர்.
இதனையடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனால் தமிழகத்தில் தடைபட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டு அவசர சட்டம்
கடந்த 2017ஆம் ஆண்டு முதலே மாநிலம் முழுவதும் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் அந்த போட்டிகள் விமரிசையாக கடந்த ஆண்டு நடைபெற்றது. அதேபோல், நடப்பாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதியும் அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, கோவை, காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பீட்டா அமைப்பு போராட்டம்
இந்த நிலையில் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தே ஆக வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட தமிழர் விரோத அமைப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றன. தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக பல்வேறு தமிழின விரோத அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தன. இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இம்மனுக்கள் மீது கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன பெஞ்ச் இதனை விசாரித்தது. இந்த விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன்பு விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை சுட்டிக்காட்டினார். இவ்வழக்குகள் மீதான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை நவம்பர் 23 முதல் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தமிழ்நாடு அரசு மனு
இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ஒருமனுவைத் தாக்கல் செய்தது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க முடியாது என கூறி தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக எம்பிக்கள் மனு
உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் மதுரை தொகுதியின் எம்பி என்ற வகையில் தம்மையும் சேர்க்க வேண்டும் என லோக்சபா எம்பி சு.வெங்கடேசன் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதேபோல அதிமுக ஓபிஎஸ் கோஷ்டியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் தேனி எம்.பி. ரவீந்தரநாத் ஆகியோரும் தங்களை இவ்வழக்கில் சேர்க்க இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.