முரசொலியெல்லாம் ஒரு பேப்பரா.. அது படிக்க கூடிய பத்திரிகையே இல்லை- தமிழிசை அட்டாக்!
சென்னை: என்னை பொருத்தவரை முரசொலியெல்லாம் படிக்கக் கூடிய பத்திரிகையே இல்லை என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தமிழிசை குறித்து கண்டன கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு தமிழிசையும் பதிலடி கொடுத்து வருகிறார். முரசொலியும் விடாமல் விமர்சித்து வருகிறது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இடியொலியே என்னை ஒன்னும் செய்ய முடியாத போது முரசொலி என்னை என்ன செய்யும்.

முரசொலி
முரசொலியெல்லாம் நான் ரெகுலராக படிப்பதே இல்லை. அது படிக்கக் கூடிய பத்திரிகையும் இல்லை என்பது என்னுடைய கருத்து என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக முரசொலியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்துகின்றன.

எங்கு பிரச்சினை
இந்த இடத்தில் இருந்துதான் பிரச்சினை தொடங்கியது. மாற்று கருத்து கூறினால் உடனே ஆளுநரை திரும்ப பெற கோருவதா என விவாத நிகழ்ச்சிகளில் தமிழிசை கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் சில கருத்துகளையும் அவர் விவாதித்திருந்தார். இதற்கு பதிலடியாக சிலந்தி கட்டுரையில் , தெலுங்கானாவில் பட்ட அடி, அங்கு ஜம்பம் பலிக்கவில்லை என்பதற்காக தமிழகத்தில் எல்லை தாண்டி தமிழிசை பேசுகிறார்.

தமிழக விவகாரத்தில் தமிழிசை
அன்னிய மாநிலத்தை சேர்ந்த தமிழிசை தமிழக ஆளுநர் விவகாரத்திலும் தமிழக விவகாரங்களிலும் மூக்கை நுழைப்பது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தது. அத்துடன் பொறுமையாக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றில்லை, எரிமலை பொறுமையாகத்தான் இருக்கும் என முரசொலியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழிசை பதில் அளிக்கையில் சிலந்தி என்ற பெயரில் உலா வரும் மூட்டை பூச்சிகளின் சாயம் வெளுக்கிறது.

நானா அன்னியர்
தமிழச்சியான என்னை அன்னியர் என கூறுகிறார்கள். தமிழகம் குறித்து நான் பேசக் கூடாது என கூறுவதற்கு இவர்களுக்கு உரிமை அல்ல. வீட்டில் தெலுங்கு பேசும் இவர்கள்தான் தமிழை வளர்க்கிறேன் என வேஷம் போடுகிறார்கள். நான் பிறந்த மாநிலம் தமிழகம், எனது ஊர் தமிழகத்தில் உள்ளது. எனவே தமிழிசைக்கு தமிழகத்தில் பேசுவதற்கு உரிமை இல்லை என சொல்வதற்கு யாரும் உரிமை கிடையாது என தமிழிசை பேசியிருந்தார்.

சிலந்தி பதில்கள்
இதற்கு முரசொலி சிலந்தி பதில்களில் கூறப்பட்டுள்ளதாவது: தன்னை பற்றி அதீதமான கற்பனையில் தமிழிசை மிதக்கிறர். எதிர்ப்பைக் கண்டதும் ஓட்டுக்குள் பதுங்கிடும் நத்தை, அந்த ஓடு இமயமலை போன்றது என எண்ணிக் கொள்ளும். தமிழிசை பதில் அந்த ரகத்தை சேர்ந்ததுதான். மடுக்கள் தங்களை மலையாக கருதலாம். மக்களுக்கு தெரியாதா மலை எது, மடு எது என்பது.

தெலுங்கானாவில் பூச்சாண்டி
தெலுங்கானாவில் காட்ட வேண்டிய பூச்சாண்டியை அங்கு காட்ட முடியாததால் சிலந்தியிடம் காட்டி பார்க்கிறார். இந்த பூச்சாண்டி அல்ல. இதற்கு மேல் படுபயங்கர பூச்சாண்டிகளை எல்லாம் கண்டவர்கள் நாங்கள். இங்கே மிரட்டல் பருப்புகள் வேகாது என முரசொலியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குத்தான் தமிழிசை, முரசொலி ஒரு படிக்கக் கூடிய நாளிதழே அல்ல என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications