தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நாளை மறுநாள்(ஏப்.6) நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் ஓய்கிறது. இன்று இரவு 7 மணிக்கு மேல் வீடுவீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் வெளியேறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிடட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் மொத்தம் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 3,585 ஆண் வேட்பாளர்களும், பெண் வேட்பாளர்கள் 411 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் இருவரும் களத்தில் உள்ளனர். இதில், திமுக கூட்டணி , அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த இரு மாதங்களாக பிரசாரம் செய்து வந்தார்.
கொரோனா கோரத்தாண்டவம்.. ஒரு நாள் பாதிப்பில் இந்தியா முதலிடம், பிரேசிலில் பலி எண்ணிக்கை கிடுகிடு
இதேபோல் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். இது தவிர அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள், திமுக மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியின் தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் ஓய்கிறது.
பிரச்சாரம் ஓய்கிறது
இன்று இரவு 7 மணியுடன் அனைத்து கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதை நிறுத்திவிட வேண்டும். இரவு 7 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது. வீடுவீடாக சென்று ஏப்ரல் 6ம் தேதி வரை வாக்கு கேட்க கூடாது. தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் இன்று மாலை 7 மணியுடன் தொகுதியை காலி செய்துவிட்டு வெளியேறி விட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா நோயாளிகள்
வருகிற 6ம் தேதி (நாளை மறுதினம்) தமிழகத்தில் 234 தொகுதியிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா நோயாளிகள் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து பிபிகிட் உடை அணிந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
தேர்தல் ஆணையம்
.நாளை மதியத்திற்கு மேல் தமிழகத்தில் மொத்தமுள்ள 88,937 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு என தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல குழுவினர் கொண்டு வந்து, பொருத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
தமிழகத்தில் நாளை மறுதினம் நடைபெறும் வாக்குப்பதிவுக்காக ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 55 ஆயிர்தது 102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இவற்றுடன் 1 லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறித்து கொள்ளும் வகையில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபேட் இயந்திரமும் பயன்படுத்தப்பட உள்ளது.
4 லட்சத்து 75 ஆயிரம் பேர்
தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் என சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 10,813 பதற்றமாக வாக்குச்சாவடிகளும், 537 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவ வீரர்கள் மற்றும் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சுமார் 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, நேரடியாக இன்டர்மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் மொத்தமாக 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்காளிக்க போகிறார்கள். இதில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சத்து 3 ஆயிரத்து 651 பேரும், பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 192 பேரும் உள்ளனர். இந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்ககூடியவர் 13 லட்சத்து 83 ஆயிரத்து 610 பேர் உள்ளனர்.