"எல்லாம் நாடகம்" கண்ணியத்திற்கு மாறாக நடந்துகொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அண்ணாமலை விமர்சனம்!
சென்னை: மக்களின் எதிர்ப்பை திசைதிருப்ப உணர்வு ரீதியான பிரச்சினையை கிளப்புவது திமுகவின் வாடிக்கை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சட்டசபை கூட்டத்தில் கண்ணியத்திற்கு மாறாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்துகொண்டதால் ஆளுநர் அவையைவிட்டு வெளியேற நேரிட்டது என்றும், மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் அவையில் நடப்பதெல்லாம் நாடகம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
நடப்பாண்டில் தமிழ்நாட்டின் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. பொதுவாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இன்று 2023ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றிய போது, சமூக நீதி, திராவிட மாடல், தமிழ்நாடு, அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிக்க மறுத்து கடந்து சென்றார்.

ஆளுநர் வெளிநடப்பு
இதற்கு சட்டசபையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, தீர்மானமும் கொண்டு வந்தார். இதனால் சட்டசபையில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் மரபு மீறிய செயலுக்கு விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை ஆதரவு
ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு பாஜக ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் நடந்த விவகாரம் குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களின் எதிர்ப்பை திசைதிருப்ப உணர்வு ரீதியான பிரச்சினையை கிளப்புவது திமுகவின் வாடிக்கை.
ஆளுநரின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக நாடகம்
அதேபோல், கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு திமுக மவுன நாடகம் நடத்துகிறது. கண்ணியத்திற்கு மாறாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்துகொண்டதால் ஆளுநர் அவையைவிட்டு வெளியேற நேரிட்டது. மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் அவையில் நடப்பதெல்லாம் நாடகம்.

இது கட்சி நிகழ்ச்சியல்ல
மாண்புமிகு ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்பே திமுகவின் கூட்டணிக் கட்சிகள் முழக்கமிட தயாராகிவிட்டனர். தமிழ்நாட்டின் சூழல் உண்மைக்குப் புறம்பாக இருக்கும்போது, அரசால் தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்கும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. திராவிட மாடல் என்ற வார்த்தைகள் ஆளுநர் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு, சட்டசபை ஒன்றும் கட்சி நிகழ்ச்சி அல்ல என்பதை திமுக நினைவில் கொள்ள வேண்டும்.

நகைச்சுவை
பெட்ரோல் குண்டு சம்பவங்கள், தற்கொலை படை தாக்குதல் நடைபெற்ற தமிழ்நாட்டை அமைதி பூங்கா என்று ஆளுநர் குறிப்பிடுவார் என்று எதிர்பார்ப்பது நகைச்சுவையாக இருக்கிறது. அதேபோல் சட்டசபை சபாநாயகர் நடுநிலையை கடைபிடிக்கவில்லை. தனது அரசியல் சாசன பொறுப்பை ஆளுநர் நிறைவேற்றுவதை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications