"அம்மா விபத்துக் காப்பீடு" உட்பட.. சாமானியர்களுக்கு பலன் கொடுக்கும் டாப் 5 பட்ஜெட் அறிவிப்புகள்
சென்னை: தமிழக இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட் என்ற போதிலும், பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் அதிக மக்களை சென்று சேரக்கூடிய, சாமானியர்களுக்கும் பலன் கிடைக்க கூடிய டாப் 5 திட்டங்களை இதோ வரிசைப்படுத்தியுள்ளோம்.
தேர்தல் அறிவிக்கை வெளியாக இன்னும் 10 நாட்கள்தான் உள்ள நிலையில், இந்த பட்ஜெட் அறிவிப்புகள் கவனம் ஈர்த்துள்ளன.
கணிப்பொறி பாடம்
6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பஸ்கள் கொள்முதல்
அடுத்து வரக்கூடிய சில ஆண்டுகளில் புதிதாக 12 ஆயிரம் பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. இதுல 2,500 பேருந்துகள், மின்சார பேருந்துகளாக இருக்கும்.
மாற்றுத் திறனாளிகள் நலன் திட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான நலனுக்காக ரைட்ஸ் என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டது. ஏற்கனவே மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், உலக வங்கியின் பரிசீலனையில் இந்த திட்டம் இருப்பதாகவும் இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து காப்பீடு
அம்மா விபத்து காப்பீட்டு திட்டத்தின் மூலமாக, குடும்ப தலைவரின் விபத்து மரணத்திற்கு ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இயற்கை மரணமாக இருந்தால், 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. அதேபோல நிரந்தர இயலாமைக்கு ரூ.2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஏழைகளுக்கு பலன் கிடைக்க கூடிய டாப் 5 திட்டங்களாகும்.
தமிழ் இருக்கை
மேலும், ஏற்கனவே ஹார்வார்டு, ஹூஸ்டன் போன்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை உள்ளது. அதேபோல கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.