சர்ப்ரைஸ் விசிட்.. 5 இடங்களில் திடீரென சோதனை செய்த முதல்வர்.. வேக்சின் முகாம்களில் சுவாரசிய சம்பவம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வேக்சின் முகாம் நடக்கும் 5 இடங்களில் திடீரென முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக இன்றும் வேக்சின் முகாம் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுக்க மொத்தம் 20 ஆயிரம் வேக்சின் முகாம்கள் அமைக்கப்பட்டு வேக்சின் போடப்பட்டு வருகிறது.முதல் வேக்சின் மெகா முகாமில் 29 லட்சம் பேர் வரை தமிழ்நாட்டில் வேக்சின் போட்டுக்கொண்டனர்.
அதன்பின் கடந்த முகாமில் 16 லட்சம் பேர் வரை வேக்சின் போட்டுக்கொண்டனர். இதனால் இப்போது வரை தமிழ்நாட்டில் 4,54,48,918 டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ளது. 3,50,18,770 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 1,04,30,148 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.
சபாஷ்..! களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை திடீர் ஆய்வு
முகாம்
தமிழ்நாடு முழுக்க இன்றும் மாபெரும் வேக்சின் முகாம் நடத்தப்பட்டது. கடந்த முறையை போலவே இன்றும் 20 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. மொத்தமாக 15 லட்சம் பேருக்கு வேக்சின் போட இன்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கைவசம் 20 லட்சம் வேக்சின் டோஸ்கள் உள்ளது.
எத்தனை
இந்த நிலையில் இதுவரையில் 13,64,188 பேருக்கு வேக்சின் போடப்பட்டுவிட்டது. அதாவது 13 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேக்சின் போடப்பட்டுவிட்டது. இதனால் இன்று மாலைக்குள் இலக்கை தாண்டி வேக்சின் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மக்கள் ஆர்வமாக வேக்சின் போட்டு வருகிறார்கள்.
டார்கெட்
பல்வேறு மாவட்டங்களுக்கு மக்களுக்கு வேக்சின் போடுவதற்காக சிறப்பு சலுகைகள், பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வேக்சின் போட்டுக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் குடம், ஆபரணங்கள், கொலுசு போன்ற பரிசுகள் பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்படுகின்றது. இதனால் வேக்சின் போடும் ஆர்வம் மக்கள் இடையே அதிகரித்து உள்ளது. வாரா வாரம் இதேபோல் பெரிய வேக்சின் முகாம்களை நடத்தும் திட்டத்தில் அரசு உள்ளது.
ஸ்டாலின்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று 5 வேக்சின் முகாம்களில் திடீரென சோதனை நடத்தினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு திடீரென வந்த முதல்வர் அங்கு உள்ள தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். அங்கு பயணிகள் பலர் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அவர்களிடம் கனிவாக பேசிய முதல்வர் தடுப்பூசி கேம்ப் குறித்து கேட்டறிந்தார். முதல்வரின் இந்த திடீர் வருகையை மக்கள் எதிர்பார்க்கவில்லை.
ஆய்வு
அதன்பின் அங்கிருந்து சென்னையில் உள்ள திருமண மண்டப முகாம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அயனாவரத்தில் உள்ள பள்ளி முகாம், பட்டாளத்தில் உள்ள இன்னொரு பள்ளி, கொளத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஆகிய மேலும் 3 இடங்களில் ஆய்வு செய்தார். இங்கே திடீரென முதல்வர் வந்ததை அங்கிருந்த மக்களும், அதிகாரிகளும் எதிர்பார்க்கவில்லை. இதனால் முதல்வரை பார்த்து ஒரு நிமிடம் திகைத்து நின்றனர்.
வேக்சின் முகாம் ஆய்வு
முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன் இருந்தார். அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முதல்வர் வேக்சின் முகாம் குறித்து கேள்விகளை கேட்டார். மக்கள் வருகை எப்படி இருக்கிறது. ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்று கேட்டார். அதோடு அங்கு மக்களிடம் வேக்சின் போட்டபின் முறையாக ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி அவருக்கு நன்றி தெரிவித்தார்.