திருமணத்தை பதிவு செய்வது இனி ஈஸி.. தமிழக சட்டசபையில் தாக்கலானது சட்டத் திருத்தம்
சென்னை: பதிவுத் திருமணத்தை எளிமையாக்கும் சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009- கீழ் திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணம் நடைபெற்று முடிந்தது 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் அந்த திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது சட்டம்.
இந்த குறிப்பிட்ட கால கெடுவுக்குள் திருமணத்தை பதிவு செய்ய முடியாதவர்கள் பிறகு திருமணத்தை பதிவு செய்ய வாய்ப்பு கிடையாது. எனவே அரசின் சலுகைகளை பெற முடியாது.
எந்த அவசியமும் இல்லாமல்... எதற்கு வங்கி ஒழுங்குமுறை அவசர சட்டம்... காங்கிரஸ் கேள்வி!!
திருமண பதிவு கட்டாயம்
திருமணத்தை பதிவு செய்யாமல் குடும்பம் நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று தமிழக திருமண பதிவு சட்டம் கூறுகிறது. இருப்பினும் நடைமுறையில் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப் படுவதில்லை. திருமணப் பதிவை இந்த அளவுக்கு சட்டம் வலியுறுத்தி கூறினாலும் அதை பதிவு செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு.
திருமண இடம்
திருமணம் எங்கு நடக்கிறதோ, அந்த இடத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலைமை இதுவரை இருந்து வந்தது. எனவே, திருமணம் முடிந்ததும் தங்களது வீடுகளுக்கு திரும்பும் மணமக்கள், பிறகு திருமணத்தை பதிவு செய்யாமல் அலட்சியமாக விட்டுவிடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
சட்டத் திருத்தம்
இந்த நிலைமையை மாற்றுவதற்காக ஒரு சட்டத் திருத்தத்தை தமிழக அரசு இன்று சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். திருமணம் நடைபெறும் இடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில்தான் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயம் கிடையாது என்று அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருமணம் ஒழுங்குமுறை
இந்த சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேறிய பிறகு, நடைமுறைக்கு வரும். இதன்பிறகு, திருமணத்தை பதிவு செய்வது மேலும் எளிமையாகும் என்பதால், திருமணங்கள் இன்னும் கூட முறையாக ஒழுங்கு முறைப்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.