பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எந்தெந்த ஊர்களுக்கு எப்படி செல்வது?
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையிலிருந்து மக்கள் படையெடுப்பர். அவர்கள் எந்த சிரமமும் இன்றி பண்டிகைக்கு ஊருக்கு சென்று வர அரசு ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்காக இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 16,392 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. சென்னையை பொருத்தமட்டில் இன்று முதல் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எந்தெந்த இடங்களில் பேருந்துகள்
அதன்படி சென்னை கோயம்பேடு, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையம் என 6 இடங்களில் இருந்து தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளுக்கு மாதவரத்தில் சிறப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம்
அது போல் புதுவை, கடலூர், சிதம்பரம் செல்ல கே கே நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். அது போல் கும்பகோணம், தஞ்சை செல்ல தாம்பரம் மெப்ஸில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை , நெய்வேலி, சிதம்பரம் செல்ல தாம்பரம் ரயில் நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்து நிலையம்
அது போல் வேலூர், ஆரணி, திருப்பத்தூர், ஓசூர், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு செல்ல பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லை , மதுரை, கோவை, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பேருந்துகள்
மேலும் சிறப்பு பேருந்துகளில் பயணிக்க 12 முன்பதிவு மையங்களிலும் tnstc என்ற செயலியிலும் www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் பயணிகள் முன் பதிவு செய்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவ 20 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 1.50 லட்சம் பேர் முன் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications