TN Plus 2 Marks: 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை அறிவித்தது தமிழக அரசு!
சென்னை: தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வகுப்புக்கான மதிப்பெண் வழங்கும் முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் தலைமையில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்துள்ளது.
10,11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களை கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
1. 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3பாடங்களுடைய சராசரி)- 50%
2.11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்)- 20%
3. 12-ஆம் வகுப்பு செய்மறைத் தேர்வு அல்லது இன்டர்னல் மதிப்பெண்கள்- 30 %
12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்கும் பெற்ற மதிப்பெண்கள் முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றுப்பட்டு (Extrapolated to 30 marks) முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கா 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்கு பெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்கு பெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ, அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில் கொண்டு 35 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும்.
11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு அக மதிப்பீடு செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித்தேர்வுகளாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.
ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31 ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.
இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களே அவர்களது இறுதி மதிப்பெண்களாக அறிவிக்கப்படும்.
தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்று பரவல் சீரடைந்தவுடன் மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு முறையில் பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் கணக்கிடப்பட்டு உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூலை 31 ஆம் தேதிக்குள் தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடும்.