கொஞ்சம் கஷ்டம் தான்.. அடுத்த 25 ஆண்டுகள் கடுமையானதாகவே இருக்கும்.! ஓப்பனாக சொன்ன ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி நாட்டின் வளர்ச்சி குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
சென்னையில் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவின் வளர்ச்சி, உலக பொருளாதாரம் குறித்துப் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக வருங்கால இந்தியா எப்படி இருக்கும் என்பது குறித்தும் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
'ஆளுநர் பேசுவது அரசியலமைப்பிற்கே எதிரானது..' இந்தியாவை இந்து நாடு என்ற ஆளுநர்! கனிமொழி பதில்
ஆளுநர் ரவி
தலைநகர் சென்னையில் தரமணி பகுதியில் அமைந்துள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIFT) 11ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் 2022இல் படிப்பை முடித்த 263 மாணவர்களுக்குப் பட்டய சான்றிதழை வழங்கினார். மேலும், முதல் 3 இடம் பெற்ற மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும் ரொக்கப் பரிசையும் ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கினார்.
மாணவர்களுக்கு அட்வைஸ்
அப்போது மாணவர்கள் மத்தியில் மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது ரொம்பவே மகிழ்ச்சியைத் தருகிறது. பட்டம் பெறும் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா தனது பயணத்தில் மக்கிய இலக்குகளை அடைய வேண்டி உள்ளது. அதற்கு மாணவர்கள் உந்து கோளாக நிச்சயம் இருக்க வேண்டும். இப்போது படிப்பை முடித்துள்ள மாணவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல உள்ளீர்கள்.
தன்னிறைவு இந்தியா
மனித இனத்தின் ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சியிலும் பேஷன் தொழில்நுட்பத்தின் பங்கு உள்ளது. சர்வதேச அளவில் 18ஆம் நூற்றாண்டில் இந்தியா தான் ஜவுளித் துறையில் முன்னணியில் இருந்தது. ஆனால், இப்போது நம்மை வேறு நாடுகள் முந்திவிட்டன. எனவே, நாம் இன்னும் கூட இலக்கை நோக்கி வேகமாக செல்ல வேண்டும். இந்தியா இப்போது ஆத்ம நிர்பர் பாரத் எனப்படும் தன்னிறைவு பாரதம் என்ற பெரிய இலக்கை நோக்கிச் செல்கிறது. இதை அடைய மாணவர்களின் பங்களிப்பு கண்டிப்பாகத் தேவை.
இந்தியாவின் இலக்கு
பழங்காலத்தில் ரோம பேரரசுக்கு கூட நமது நாட்டில் இருந்து தான் ஆடைகள் சென்றடைந்தன. இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். மஸ்லின் (Muslin) என்ற புகழ்பெற்ற ஆடை வகை கூட ஆந்திராவின் மசூலிப்பட்டினம் பகுதியின் பெயரில் இருந்தே தோன்றியது. கடந்த 2000 ஆண்டுகளாகவே நாம் தான் சர்வதேச அளவில் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருந்தோம். இப்போது நாம் அந்த நிலையை இழந்துள்ளோம். இழந்த இடத்தை மீட்டு, சரி செய்ய நாம் முயன்று வருகிறோம். நமக்கு அனைத்தையும் காட்டிலும் நாடே முக்கியம்.
கடுமையாகவே இருக்கும்
நாட்டின் வளர்ச்சிக்குத் தான் நமது பங்களிப்பு இருக்க வேண்டும். நமது நாடு இப்போது மின்னல் வேகத்தில் அடுத்த கட்டத்திற்குச் சென்று கொண்டு இருக்கிறது. எனவே, அடுத்த 25 ஆண்டுகள் கடுமையானதாகவே இருக்கும். இந்த 25 ஆண்டுகளில் இந்தியா நிச்சயம் நமது இலக்கை அடைந்திருக்க வேண்டும். தன்னிறைவுடன் பிற நாடுகளை நம்பி இருக்காத அளவுக்கு நாம் அடுத்த 25 ஆண்டுகளில் வளர வேண்டும். இதற்கு மாணவர்களாகிய உங்கள் பங்களிப்பும் ரொம்பவே முக்கியம்" என்றார்.