ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 24 மணி நேரமும் இலவச உணவு.. ஆரம்பத்திலேயே அசத்தும் அமைச்சர் சேகர்பாபு!
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஊரடங்கு முடியும் வரையில் 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
திருக்கோயில்கள் சார்பில் தினமும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நிருபர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு - சென்னையில் தொடங்கி வைத்தார் சேகர்பாபு
24 மணி நேரமும் உணவு
முழு ஊரடங்கு காலத்தில் கொரோனா காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கும், பிற நோய்களால் அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கும் அவர்களைக் காண வருபவர்களுக்கும் 24 மணி நேரமும் உணவு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.
தனியார் அமைப்பு
இதற்காக மாதந்தோறும் ஒரு நாள் இலவச உணவு வழங்கி வரும் 'சங்கமித்ரா' என்னும் தனியார் அமைப்பினைத் தொடர்புகொண்டு இந்த கோரிக்கையை விடுத்தோம்.எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தனியார் அமைப்பு, இலவச உணவை வழங்க முன்வந்தது. அதன்படி, 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
கட்சி சார்பில் மக்களுக்கு உதவி
ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்வதோடு, கட்சி சார்பாகவும் மக்களுக்கு உதவ முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.
கோயில்களில் உணவு
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ' கோயில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொட்டலங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் நிலையில் , கொரோனா பாதிப்பு குறையும் வரை இவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளோம். ஒரு லட்சம் பேருக்கு தினமும் 30 லட்சம் ரூபாய் செலவில் மதிய உணவு வழங்கப்படுவதுடன் கபசுரக் குடிநீர், மாஸ்க் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்" என்றார்.