குழப்பத்துக்குப் பின் 3 மாவட்டங்களில் பேரணி நடத்திய ஆர்.எஸ்.எஸ்.- ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு!
சென்னை: தமிழகத்தில் கம்பு, ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூரில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ்.இயக்கம், அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரியது. ஆனால் தமிழக அரசு அனுமதி தரவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் வழக்கு தொடர்ந்தது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.இயக்க அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி 50 வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு நடைபெற்ற போது, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவுக்கு தடை விதிக்கப்பட்டது; பின்னர் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்க நிர்வாகிகள் வீடுகள், வாகனங்களை இலக்கு வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனை நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதமாக முன்வைத்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பின் பின்னணியை விளக்கியது.

44 இடங்களில் அனுமதி
பின்னர் நவம்பர் 6-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் 3 இடங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்டது. எஞ்சிய 47 இடங்களில் 23 இடங்களில் உள்ளரங்க கூட்டம் நடத்த அனுமதிப்பதாகவும் எஞ்சிய 24 இடங்களில் அனுமதி தர இயலாது எனவும் புலனாய்வுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழக அரசு வாதிட்டது. இவ்வழக்கில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நவம்பர் 6-ல் ஊர்வலம் நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

11 நிபந்தனைகளால் குழப்பம்
அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலத்துக்கு 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், கத்தி, ஆயுதங்களை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் எடுத்துச் செல்லக் கூடாது; மத மோதல்களை தூன்டும் வகையில் பேசக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தன. இதனை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ்.இயக்கம், 44 இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதலில் அறிவித்தது. பின்னர் 3 இடங்களில் மட்டும் இன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும் என அறிவித்தது.

3 இடங்களில் இன்று பேரணி
இதனையடுத்து கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூரில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த 3 மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணிக்காக அண்டை மாநில போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் ஆர்.எஸ்.எஸ்.இயக்க அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினர் சீருடையுடன் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சியில் வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டு,153வது காந்தி ஜெயந்தி, 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.

கடலூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
கடலூர் திருப்பாதிரிபுலியூர் பகுதியில் பாடலீஸ்வரர் கோயில் அருகில் இருந்து 400 கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடை அணிந்து சன்னதி வீதி, தேரடி தெரு, சுப்புராயலூர் செட்டி தெரு, சஞ்சீவி நாயுடு தெரு, போடி செட்டி தெரு போன்ற வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் காவல்துறை சார்பில் திருப்பாதிரிப்புலியூர் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஐஜி கண்ணன் தலைமையில் ஒரு டிஐஜி, 3 எஸ்.பி, 3 ஏ டி எஸ் பி, 15 டிஎஸ்பி, 30 இன்ஸ்பெக்டர், 200 சப் இன்ஸ்பெக்டர், மற்றும் 850 காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் ஊர்க்காவல் படை என 1500க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications