திரும்பப்பெறு... திரும்பப் பெறு... ஆளுநருக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆர்பாட்டம்
ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது.
சென்னை: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை திரும்ப பெறக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.
நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி நீட் தேர்வுக்கு விலக்கு கோறும் மசோதா நிறைவேற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, வேல்முருகன், ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை அருகே முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்திருப்பது. நீட் விலக்கு கோரும் தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர், அத்தீர்மானத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படாதது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் - வேல்முருகன் அறிவிப்பு
ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர். அவரால் தன்னிச்சையான முடிவு எடுக்க முடியாது. அதனை தான் அரசியலமைப்பு சட்டமும் கூறுகிறது. கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகளும் சுட்டிக்காட்டுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கண்டனத்துக்குரியது. ஆளுநரின் இத்தகையை நடவடிக்கை, அவரின் அறியாமையை தான் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளை ஆளுநர் படித்தாரா என்பது கூட தெரியவில்லை என்று வேல்முருகன் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை அருகே வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திரும்பப் பெறு... திரும்பப் பெறு என்று ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் முழக்கமிட்டனர்.
Recommended Video
போராட்டக்காரர்கள் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்து விடாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏராளமான காவல்துறையினர் ஆளுநர் மாளிகை முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.