தமிழகத்தில் வடமாநிலத்தவர்களுக்கு வேலை...! அரசுக்கு வேல்முருகன் கண்டனம்
சென்னை: தமிழக பொதுத்துறைகளில் வடமாநிலத்தவர்களை பணிக்கு அமர்த்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.
மாநில உரிமைகளை தானாக முன்வந்து சரண்டர் செய்ததன் விளைவு, தமிழகப் பொதுத்துறைக்கும் ஒன்றிய அரசே தேர்வு நடத்தி, வடமாநிலத்தவரைப் பணியிலமர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஜெயலலிதா பாணியில் அரசியல் செய்ய வேண்டும்... ரஜினிக்கு ஆலோசகர்கள் அறிவுரை
மாநில உரிமை
மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக, தானாக முன்வந்து ஒன்றிய அரசிடம் சரண்டர் செய்துவருகிறது ஓபிஎஸ்-ஈபிஎஸ் அரசு. உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின்திட்டம், மருத்துவக் கல்லூரிக்கு நீட் நுழைவுத் தேர்வு, 3ஆம், 5ஆம், 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு இத்யாதிகள்.
இதனால் நேரடி விளைவுகளும் பக்க விளைவுகளும் பின்விளைவுகளும் ஏற்படுகின்றன. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் தமிழக ரேஷன் பொது விநியோகத் திட்டத்திற்குப் போதுமான அரிசி ஒன்றிய அரசிடமிருந்து கிடைப்பதில்லை.
இடமில்லை
நீட் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு, டாப் மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் தமிழக மருத்துவக் கல்லூரிகளிலேயே இடம் கிடைப்பதில்லை. புதிய கல்வித் திட்டம் என்ற புராண கல்வித் திட்டத்தின் முக்கியக் கூறான 3ஆம், 5ஆம், 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு என்பதை, தமிழக மக்களின் ஏகோபித்த எதிர்ப்பால் திரும்பப்பெற்றுக் கொண்டாலும், அதன் ஆபத்து அப்படியேதானிருக்கிறது.
ஆங்கில கேள்வி
அண்மையில் மின்வாரியக் கணக்கீட்டாளர் பதவிக்கு 1300 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்திருந்தது. தேர்வில் 100 கேள்விகளில் 80 கேள்விகள் ஆங்கிலத்தில் கேட்கப்படும், 100க்கு 20 கேள்விகள் மட்டுமே தமிழில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மின்வாரியப் பணி என்பதால் அளவீட்டுக் கருவி மூலம் கணக்கீடு செய்வதற்கும் மற்றும் மிதிவண்டி ஓட்டுவதற்கும் தெரிந்திருத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் பதில்
இந்நிலையில் மின்துறை அமைச்சர் தங்கமணி, "1300 கணக்கீட்டாளர் பணிக்கான தேர்வை மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனம் நடத்துவதால்தான் ஆங்கிலத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது. என் கவனத்திற்கு வந்த பின்பு முதல்வருடன் பேசி தற்போது தமிழிலேயே எழுத ஆணை பெற்றுள்ளோம்" என்று கூறினார். இதன் மூலம் பிரச்சனை தீர்ந்தது என்று நினைக்கலாம். ஆனால் அது தற்காலிகத் தீர்வுதானே தவிர நிரந்தரத் தீர்வல்ல. பிரச்சனையின் உட்புகுந்து ஆராய்ந்தால்தான் அதன் தீவிரம் புரியும்.
வஞ்சகத் திட்டம்
இதிலிருந்து தெரிவது என்ன? இப்போது பிரச்சனை தீர்ந்திருக்கலாம்; நாளை மீண்டும் பிரச்சனை வெடிக்கும்.இவ்விதம் மாநில உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதே, வடவர்களை தமிழகத்தில் வேலைக்கமர்த்துவதற்கே! தமிழர்களை வேலை தேடி தமிழகத்தை விட்டு வெளியேறவைத்து, அவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கே, ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசின் இணந்த வஞ்சகத் திட்டத்திற்கு உதவுவதால்தான் பழனிசாமி அரசு பதவியில் நீடிக்க முடிகிறது; இல்லையென்றால் ஊழலுக்காக மொத்த அமைச்சரவையுமே தண்டனைக்குள்ளாக வேண்டி வரும்.
வடமாநிலத்தவரைப் பணியிலமர்த்தும் அபாயம் நேர்ந்துள்ளதை மக்களுக்குச் சொல்வதுடன், வேண்டாத இந்த செயலைக் கண்டிக்கவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!