"ஐயா.. தயவு செய்து மதுக்கடையை திறக்காதீங்கய்யா ".. முதல்வருக்கு ஒரு பெண்ணின் உருக்கமான கோரிக்கை
மதுக்கடையை திறக்க வேண்டாம் என்று பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: "முதலமைச்சர் ஐயா.. தயவுசெய்து மதுக்கடையை ஊரடங்கு நேரத்துல திறக்காதீங்க.. பல பேர் கண்ணீருக்கு ஆளாகாதீங்க ஐயா.. திறக்காதீங்க.. திறக்காதீங்க" என்று சங்கீதா என்ற இளம்பெண் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆடியோ பதிவு மூலம் கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார்.
Recommended Video
மதுக்கடையை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்ற தகவல்கள் கசிந்த நிலையில், 7-ம்தேதி முதல் அவைகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவு வெளிவந்தது. இது பல தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.. டாக்டர் ராமதாஸ் முதல் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வரை கேள்வி எழுப்பி கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்களின் பலரது நிலையும் பெரும்பாலும் இவ்வாறே உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.. இந்த மதுக்கடைகள் திறப்பு அறிவிப்பு என்பது மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில், இளம்பெண் ஒருவர் ஆடியோ மூலம் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
சங்கீதா
தன்னுடைய பெயர் சங்கீதா என்பதைதவிர, அவரை பற்றின வேறு எந்த விவரத்தையும் அந்த ஆடியோவில் சொல்லவில்லை. எந்த ஊர், யார் இவர் என்பதும் தெரியவில்லை. ஆனால் மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்று முதல்வருக்கு நேரடியாக கோரிக்கை விடுக்கும் சங்கீதாவின் இந்த ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:
முதலமைச்சர் ஐயா
"வணக்கம்.. என் பேர் சங்கீதா.. இந்த பதிவு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு!! ஐயா நீங்க மதுக்கடைகளை திறக்கணும்னு சொல்லி இருக்கீங்க.. இந்த ஊரடங்கு காலத்துல மதுக்கடையை திறக்கணும் என்பது அவசியம் இல்லாத ஒன்னுன்னு நான் நினைக்கிறேன்.. ஏன்னா, ஊரடங்கு காலத்துல பசி கொடுமையால நிறைய குடும்பம் சீரழிஞ்சு போயிட்டிருக்கு.
குழந்தைகள்
இந்த மாதிரி நேரத்துல இப்படி மதுக்கடையை திறக்கும்போது, நிறைய குடிமகன்கள் வீட்டில் வந்து சண்டை போடுவார்கள்.. அவங்களுக்கு கையில காசுகூட இப்போ இல்லை.. வேலையும் இல்லை.. அப்படி இருக்கும்போது, எந்த காசை வெச்சு மதுக்கடையில வாங்கி குடிப்பாங்க? கடன் வாங்கியே அவங்க குடிப்பாங்கன்னே வச்சுக்கிட்டாலும் அந்த வீட்டு குழந்தைங்க இதை பார்த்து எவ்வளவு மனரீதியா பாதிப்பாங்கன்னு நீங்க நினைக்க மாட்டேங்கறீங்க?
பல பேர் கண்ணீர்
வீட்ல எவ்ளோ சண்டை வரும்னு நினைக்க மாட்டேங்கறீங்க? இந்த நேரத்துல மதுக்கடைகளை திறக்கறது தேவையில்லாத ஒன்று.. குடும்ப வன்முறைகள் அதிகமாகும்.. நான் பேசுனதுல ஏதாவது தப்பு இருந்தால் மன்னிச்சுடுங்க.. ஆனா தயவுசெய்து மதுக்கடையை திறக்காதீங்க.. திறக்காதீங்க.. திறக்காதீங்க.. பல பேர் கண்ணீருக்கு ஆளாகாதீங்க ஐயா" என்று தெரிவித்துள்ளார்.
சிறப்பான செயல்பாடுகள்
தமிழக முதல்வரை பொறுத்தவரை, கொரோனோ தடுப்பில் இந்திய அளவில் மிகச் சிறப்பாக செயல்பட்ட மாநில அரசுகளில் ஒன்று என்ற பெயரை வாங்கியவர்.. ஆற்று மணல் அள்ள தடை விதித்து அனைவரின் மனதையும் வென்றவர்.. அதைவிட முக்கியமாக பொதுமக்களிடம் நெருங்கியே இருப்பவர்.. யார், என்ன உதவி கேட்டாலும் தட்டாமல், தயங்காமல் உடனடியாக செய்பவர்.. எளிமையான முதல்வர்களில் முன்னிலையில் உள்ளவர்.
நிதி தட்டுப்பாடு
கடந்த 2 மாதமாக முதல்வரின் செயல்பாடுகள் கட்சி பேதமின்றி அனைவரையுமே நெகிழ வைத்து வரும்நிலையில், மதுக்கடைகளையும் திறக்காமல் செய்தால், நிச்சயம் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிடுவார். பிற மாநிலங்களை போல தமிழக அரசுக்கு நிதி தட்டுப்பாடு இருப்பது உண்மை தான்... இருப்பதை கொண்டு இதுவரை திறம்பட செயல்பட்டு வருவதையும் மக்கள் கண்கூடாகவே கண்டு வருகிறார்கள்.. ஆனால், அதற்காக இவ்வளவு விலையை தரக்கூடாது.. மக்கள் தாங்க மாட்டார்கள் என்பதுதான் அனைவரின் எண்ணமும்... மதுக்கடைகளை திறக்க கூடாது என்பதுதான் அனைவரின் இப்போதைய எதிர்பாப்பும்!!
சென்னை
இந்த நிலையில் தற்போது சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்ற நற்செய்தியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் இதை வரவேற்று மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். நாளை இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் விரிவடைந்தால் தமிழக மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே முதல்வருக்கு மிகப் பெரிய வரவேற்பும், அன்பும் குவியும் என்பதில் சந்தேகமில்லை.