தலித் தலைவர் எங்கே? பெண் தலைவர் எங்கே?.. திமுகவுக்கு நாலாபக்கமும் செக்.. தெறிக்க விடும் பாஜக!!
தலித் வாக்குகளை அள்ள திமுகவுக்கு குறி வைக்கிறது பாஜக
சென்னை: கப்சிப் என்று வாயை திறக்காமல் உள்ளது திமுக.. அந்த அளவுக்கு வசமாக சிக்கி பதில் சொல்ல முடியாமல் உள்ளது.. இதற்கு காரணம் எல்.முருகனை வைத்து ஒரு திருவிளையாடலை துவங்கி வைத்துள்ளது பாஜக தலைமை!
சித்தாந்த ரீதியான நிறைய விமர்சனங்கள் பாஜக மீது தொடர்ச்சியாகவே உள்ளது.. அதிலும் இது தமிழகத்தில் அதிகம் என்றே சொல்லலாம்.. அப்படிப்பட்ட விமர்சனங்களை பெற்ற இதே பாஜகதான், தற்போது மாநில தலைமைக்கு ஒரு பட்டியலினத்தவரை தலைவராக நியமித்துள்ளது.
இந்த நியமனத்தை எடுத்த எடுப்பிலேயே செய்ததாக கருத தோன்றவில்லை.. தீர்க்கமாக யோசித்து, முடிவு செய்துதான் முருகனை அறிவித்துள்ளனர். எல்.முருகனின் நியமனத்தினால் பலருக்கு ஆப்பு வைத்துள்ளது பாஜக தலைமை!
அதிருப்தி
முதலாவதாக, தமிழக பாஜக மூத்த தலைவர்களுக்கே இது பெருத்த அதிர்ச்சிதான்.. இல.கணேசன், நயினார், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீநிவாசன் போன்றோரும் இந்த பதவியை எதிர்பார்த்திருந்தனர்.. என்றாலும் முருகனுக்கு சீட் வழங்க காரணமே எச்.ராஜா, எஸ்வி போன்றோரின் வார்த்தைகளுக்கு கடிவாளம் போடத்தான் என்கிறார்கள்.
சர்ச்சைகள்
சமீப காலமாக இவர்கள் அள்ளி தெளிக்கும் வன்முறை வார்த்தைகள் சர்ச்சைகளை ஏற்படுத்திவிடுகிறது.. இவர்கள் பேட்டிகள், பதிவுகள் எல்லாமே எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல ஆகிவிடவும், மேலும் பாஜகவுக்கு அதிருப்தியைதான் உண்டுபண்ணுகிறது.. ஏற்கனவே தாமரையை மலர வைக்க முடியாமல் மேலிடம் தவித்து வரும்போது, இதுபோன்றவர் எதையாவது பேசி மேலும் பிரிவினையை அதிகப்படுத்தி விடுவதாகவே பாஜக மேலிடம் கருதியது. அதனால்தான் முருகனை தலைமை பொறுப்பில் வைத்து அவர்களுக்கு ஒரு லேசான வாய்ப்பூட்டினை போட்டுள்ளது என்கிறார்கள்.
விசிக
அடுத்ததாக, விசிகனருக்கு பதிலடி தருவதற்காகவும் முருகனின் நியமனத்திற்கு இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது.. தலித் மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று திருமாவளவன் பலமுறை கருத்து தெரிவித்துள்ளார்.. "தமிழக சட்டப்பேரவையில் மட்டும் பாஜக இடம்பெற்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது, அவர்கள் துவம்சம் செய்துவிடுவார்கள் என்று எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில்தான் தலித்தையே தலைவராக நியமனம் செய்து காட்டி உள்ளனர்.. இதன்மூலம் தலித் ஓட்டுக்களை பிரிக்கவே முருகனின் நியமனம் என்றும் சொல்லப்படுகிறது.
பட்டியலினம்
முக்கியமாக, திமுகவை தர்மசங்கடத்தில் முருகன் நியமனம் ஆழ்த்தி வருகிறது.. "பகுத்தறிவு பேசும் திமுகவில் இன்னும் ஒருத்தர்கூட பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் தலைவராக நியமனம் செய்யலையே ஏன்? என்று பாஜக நேரடியாகவே திமுகவை பார்த்து கேள்வியை எழுப்ப தொடங்கிவிட்டது.. நாங்கள் ஒரு பெண்ணை தலைவராக நியமனம் செய்தோம்.. இப்போது பட்டியலினத்தை சேர்ந்தவரை தலைவராக நியமனம் செய்தோம்.. ஆனால் திமுகவில் பெண் தலைவர் நியமனமே இல்லையே ஏன்? தலித்துகளை தலைவராக நியமித்து அவர்களுக்கு கீழே இதுவரை திமுகவினர் இயங்கவில்லையே ஏன் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விகள் எதுவுமே திமுக எதிர்பாராதவை.
முருகன் நியமனம்
பொதுவாக அதிமுகவை விட திமுகவுக்குதான் தலித் வாக்குகள் அதிகமாக கிடைக்கும்.. போதாக்குறைக்கு திருமாவும் பக்கபலமாக இருந்து வரும் நிலையில், முருகனின் நியமனம் அந்த தலித் வாக்குகளை பிரிக்கும் சக்தியாக உருவெடுக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. பாஜக குறித்த எத்தனையோ எதிர்மறை கருத்துக்களை திமுக, விசிக சொன்னாலும், பெண் தலைமை, தலித் தலைமை என்றால் திமுக வாயடைத்து போகும் நிலைமைக்கே ஆளாகி உள்ளது. அறிமுகம் இல்லாத முகம், ஈர்ப்பு இல்லாத முகம், ஆளுமை இல்லாத உருவம், கேள்விப்படாத பெயர் என்று முருகனை பற்றி எத்தனை விமர்சித்தாலும், பாஜக இப்போது கேள்வி கேட்கும் நிலையில் உள்ளது என்பதுதான் உண்மை!!
பஞ்சமி நிலம்
அது மட்டுமல்ல.. எல்.முருகனுக்கும் திமுகவுக்கும் ஒரு அறிமுகம் உள்ளது.. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புகார் சொன்ன சில நாட்களிலேயே பாஜக தரப்பில் இது தொடர்பாக தேசிய எஸ்சிஎஸ்டி ஆணையம் விசாரிக்க வேண்டும் என புகார் ஒன்று தரப்பட்டது.. அந்த புகாரைப் பெற்றது ஆணையத்தின் துணை தலைவர் முருகன்தான்.. மேலும் முக ஸ்டாலின் எஸ்சிஎஸ்டி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியதும் இதே முருகன்தான்.. பஞ்சமி நில விவகாரத்தில் சம்மன், விசாரணை ஆகியவற்றை மேற்கொண்டவர் என்பதால் திமுக மீதான காட்டம் அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள்.
பாஜக தரப்பு
முருகன் நியமன கணக்கு இப்படி என்றால் முக அழகிரியை வைத்து திமுகவுக்கு வேறு விதமாக செக் வைக்க பாஜக முயன்று வருகிறதாம்.. கருணாநிதி மறைந்ததில் இருந்தே அழகிரியை விடாமல் சுற்றி சுற்றி வருகிறது பாஜக.. தங்களிடம் வந்துவிடுமாறு எப்படி எப்படியோ கூப்பிட்டும் அழகிரி அதை தொடர்ந்து மறுத்து வருகிறார்.. அதற்கு காரணம் கலைஞர் மீது வைத்துள்ள பாசமும், திமுக என்ற உணர்வும்தான்.. அதனால் வேறு விதமாக அழகிரியை பாஜக தரப்பு அப்ரோச் செய்து வருகிறதாம்.
கலைஞர்
நீங்கள் எங்களுடன் வரவேண்டாம்.. ஆனால் "கலைஞர் திமுக ன்னு ஒரு கட்சியை ஆரம்பியுங்களேன்.. அப்படி ஆரம்பிச்சால், ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் எல்லாருமே உங்க கிட்ட வந்துடுவாங்க.. திமுகவின் பலம் குறையும்" என்று ஐடியா தருகிறார்களாம். ஆனால் இதற்கும் அழகிரி மவுனத்தையே பதிலாக தந்து வருகிறார் என்கிறார்கள்.
பிரசாந்த் கிஷோர்
எப்படி பார்த்தாலும் பாஜக துரிதமாக காய்களை நகர்த்த தொடங்கி உள்ளது.. முருகன், அழகிரி என்று திமுகவுக்கு நாலாபக்கமும் ரவுண்டு கட்டி.. ஸ்டாலினை ஆட்சியில் உட்கார விடாமல் செய்யும் அத்தனை வேலைகளிலும் ஜரூராக இறங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.. இதற்கெல்லாம் "பிகே" என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!