கேங்க்ஸ்டர் மோதல்.. பக்கா ஸ்கெட்ச்.. நூழிலையில் தப்பிய ரவுடி.. சென்னையை மிரள வைத்த பிரபல ரவுடிகள்!
சென்னை: சென்னையில் கேங்வார் என்று சொல்லப்படும் ரவுடிகளிடையே நடக்கும் மோதல் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. முன்விரோதம் காரணமாக அண்ணனின் நினைவு நாளன்று அவரது கொலைக்கு காரணமானவர்கள் மீது தாக்குதல் நடத்திய ரவுடியை பிரபல ரவுடிகள் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் நாட்டுவெடிகுண்டு வீசி கொல்ல முயன்றது. இவர்களை தனிப்படை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
சென்னை கே.கே நகர் மேற்கு வன்னியர் தெரு பகுதியில் வசித்து வருபவர் பிரபல ரவுடி புறா மணியின் சகோதரன் சுமன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரவுடிகளான தக்காளி பிரபாவிற்கும், புறா மணிக்கும் முன்பகை இருந்து வருகிறது.
இதன் காரணமாக சிறையில் இருந்த தக்காளி பிரபாவிற்காக ஆனந்தன் (எ) கோழி பாபு உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் புறா மணியை திட்டமிட்டு மது அருந்தவைத்து துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்தது.

ரவுடியான சுமன்
அண்ணனின் மறைவுக்குப் பின் புதிய ரவுடியாக வலம் வந்த அவரின் சகோதரர் சுமன் மீதும் விருகம்பாக்கம், கே.கே நகர், மதுரவாயில் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தனது அண்ணனான புறா மணியின் நினைவு நாளன்று சுமன் தனது கூட்டாளிகளுடன் இணைந்து ரவுடி தக்காளி பிரபாவின் கூட்டாளிகளை வெட்டிக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

வெடிகுண்டு வீச்சு
இதனையடுத்து நேற்று இரவு கே.கே நகர் மேற்கு வன்னியர் தெருவில் உள்ள சுமனின் வீட்டின் முன் கூட்டாளிகளான கோழி பாபு உள்ளிட்டோருடன் வந்த தக்காளி பிரபா, சுமன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அவனை கொல்ல முயன்றனர். இந்த வெடிகுண்டு வீச்சில் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகள் சேதமடைந்துள்ளது.

காவல்துறைக்கு தகவல்
வீட்டின் பின்புறம் குளித்துக்கொண்டிருந்ததால் ரவுடி சுமன் வெடிகுண்டு வீச்சில் சிக்காமல் அதிஷ்டவசமாக உயிர் தப்பி வீட்டின் பின் வாசல் வழியே தப்பிச் சென்று ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்தார்.

போலீசார் வருகை
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரின் ரோந்து வாகனத்தைக் கண்ட ரவுடி கும்பல் தப்பியோடி தலைமறைவானது. இதனைத் தொடர்ந்து சுமனை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தக்காளி பிரபா
அதுமட்டுமல்லாமல் ரவுடி தக்காளி பிரபாவின் உறவினர்கள் இருவரைப் பிடித்து தக்காளி பிரபா மற்றும் கூட்டாளிகளின் மறைவிடம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், நாட்டு வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான தக்காளி பிரபா, கோழி பாபு மற்றும் அவர்களது கூட்டாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசித் தேடி வருகின்றனர். கேங்வார் மோதலை முடிவுக்கு கொண்டுவர போலீசார் அனைவரையும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications