தனியார் பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் பாலின் விலையும் உயர்கிறது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Recommended Video
சென்னை: தனியார் பால் விலையை தொடர்ந்து ஆவின் பால் விலையும் உயர உள்ள தகவல் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ஆவின் பால் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் தனியார் பால் விலை உயர்வு லிட்டருக்கு இரண்டு ரூபாய் விலை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி 1 லிட்டர் பால் ரூ.56 ஆகவும், சமன் படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.50 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.54 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது

தமிழகத்தை பொறுத்த வரை தனியார் பாலை விட ஆவின் பால் தான் நிறைய விற்பனையாகிறது. குழந்தைககளுக்கு ஆவின்பால் தான் சிறந்தது என்று நிறைய தாய்மார்கள் ஆவின் பாலை கொடுத்து வருகின்றனர். தனியார் பால் விலையை விட ஆவின் பால் சற்று குறைந்த விலைக்கு தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து ஆவின் பால் விலையும் உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சப்பட்டனர். மக்கள் பயந்ததை போலவே தற்போது பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் பால் விலையை உயர்த்துவது பற்றி பேசியுள்ளார்.
உலக பால் தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அமைச்சர், பால் விலை உயர்வு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் முதலமைச்சரிடம் பேசி ஆவின் பால் கொள்முதல் விலையை, விரைவில் கூட்ட உள்ளதாக கூறினார்.
பொதுமக்களை பாதிக்காத வகையில் பால் விற்பனை விலையை உயர்த்த தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார். பால் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள செந்தில் பாலாஜி, நாம் எப்போதும் விலை உயர்வை பற்றி பேசுகிறோம். நடைமுறையையும் சிறிது யோசித்து பார்க்க வேண்டும்.
கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. அதனால் இந்த சூழலுக்கு ஏற்றவாறு தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியிருக்கின்றன என கூறினார். ஆவின் பாலின் விலையை உயர்த்துவது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார். தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்துள்ளது.
கொள்முதல் விலையை காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. இந்நிலையில் ஆவின் பால் விலையையும் உயர்த்த அரசு திட்டமிட்டு வருவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதனிடையே இன்று உலக பால் தினம் கொண்டாடப்பட்டு வருவதையொட்டி, ஆவின் பாலகங்களில் பால் பொருட்களுக்கு இன்று மட்டும் 5 சதவீத சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications