யுவன் பற்ற வைத்த “கருப்பு” நெருப்பு! ”அண்டங்காக்கா தொடங்கி எருமை வரை” அரசியல் தலைவர்களின் கருத்துகள்
சென்னை : பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு அணிந்துரை எழுதிய 'மேஸ்ட்ரோ' இளையராஜாவின் கருத்து சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மகன் யுவன் சங்கர் ராஜா போட்ட ஒற்றை போஸ்ட் சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது அரசியல் தலைவர்கள் வரை புயலை கிளப்பியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரை பெருமைப்படுவார் எனக் கூறியிருந்தார்.
கத்தரி வெயில் நெருங்குகிறது.. அனல், பசி மயக்கத்திற்கு 3 பேர் சுருண்டு பலி.. கிலியை தரும்
தமிழகம் முழுவதும் இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்தது. அதே நேரத்தில் தனது கருத்துக்களை திரும்பப் பெற முடியாது எனவும் இளையராஜா அவரது தம்பி கங்கை அமரன் கூறியதாக தகவல் வெளியானது.
யுவன் சங்கர் ராஜா
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து கிளம்பிய நிலையில், அவருக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, ஆதரவு கொடுத்தார். இந்நிலையில் அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படமும், அதில் பதிவிட்டிருந்த கருத்தும் மேலும் பரபரப்பைக் கூட்டியது. கருப்பு நிற வேட்டி கருப்பு நிற டீசர்ட் அணிந்தபடி கடற்கரை ஓரமாக நின்று எடுத்து இருந்த அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்த யுவன் சங்கர் ராஜா "கருப்பு திராவிடன்... பெருமைமிகு தமிழன்" என பதிவிட்டு இருந்தார் இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
புயலாக கிளம்பிய பதிவு
தனது தந்தைக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே மகன் யுவன்சங்கர் ராஜா இந்த கருத்தினை பதிவிட்டு இருக்கிறார் என பலர் கூறினர். மேலும் ஒருசிலர் இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய் தாங்கள் கருப்புச்சட்டை அணிந்து இருந்த படி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கருப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன் என பதிவிட்டனர். இதற்கு அடுத்தது இந்த விவகாரம் அப்படியே அரசியல் தலைவர்களே பேசும் அளவுக்கு புயலாக கிளம்பியது.
பாஜக அண்ணாமலை
முதலில் இதற்கு கருத்து தெரிவித்தவர் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தான். சென்னையில் யுவன் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், " யுவன் அண்ணா கருப்பு சட்டை அணிந்து கருப்பு திராவிடன் என்று தெரிவித்துள்ளதாக கூறுகிறீர்கள். என்னைவிட கருப்புத் தமிழன், கருப்பு திராவிடன் யாருமில்லை. அவரை விட நான் கருப்பு. அவர் சாதாக் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா கருப்பு. இது தொடர்பான கேள்விக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்" என்றார்.
நாம் தமிழர் சீமான்
அதற்கு அடுத்ததாக இதுகுறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், " நீ தமிழனாக இரு அல்லது திராவிடனாக இரு. திராவிடன், தமிழன் ஏன் பல முகமூடிகளை அணிய வேண்டும் முதலில் இந்தியன், பிறகு திராவிடன், அப்புறம் தமிழன், பிறகு எந்த சாதி, "நீ திராவிடனா? தமிழனா? யுவன்சங்கர் ராஜா கூறுவது சிறுபிள்ளைதனமாக உள்ளது . எருமை மாடு கூடத்தான் கறுப்பாக உள்ளது அது திராவிடனா" என்றார்.
அதிமுக ஜெயக்குமார்
இளையராஜா கருத்தை விட நாம் தமிழர் சீமானின் கருத்துதான் இப்போது சர்ச்சையாகியுள்ளது. திராவிடத்தை எருமை மாட்டுடன் ஒப்பிடுவதா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், " கருப்பாக இருப்பதால் திராவிடர் ஆக முடியுமா என்று சீமான் கேட்டிருக்கிறார். இது திராவிடத்தை இழிவு படுத்தும் கருத்தாகும். அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் எருமை மாடுடன் திராவிடத்தை ஒப்பிட்டு பேசுவது, திராவிடத்தை கொச்சைப்படுத்துவதாகும்" என கூறியுள்ளார்.
இந்தி தெரியாது போடா டீ சர்ட்
யுவன் இதுபோன்று சம்பவங்களை செய்வது ஒன்றும் புதிதல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தி தொடர்பான சர்ச்சை எழுந்தபோது யுவன் இதே போன்ற ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார். விமான நிலையத்தில் இந்தி தெரியாதா என தொழில் பாதுகாப்பு படை ஒருவர் கேட்டதாக சர்ச்சையான நிலையில் அப்போது "இந்தி தெரியாது போடா" என்ற டி சர்ட்டை அணிந்த புகைப்படம் அரசியல் ரீதியில் கவனத்தை பெற்றது. இது உலகம் முழுவதும் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.