அள்ளிக் கொட்டிய நயினார், மெளனம் கலைக்காத ஓபிஎஸ்-இபிஎஸ், ஆத்திரத்தில் தொண்டர்கள்.. முடிவு என்ன?
சென்னை : அதிமுகவில் சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேச யாருமே இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் இதுவரை எதிர்வினையாற்றாத நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியே வரவேண்டும் என அதிமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
இந்த நிலையில் தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு பாஜக சார்பில் உண்ணாவிரத சென்னை போராட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் பேச அதிமுகவில் ஒருவருக்கும் ஆண்மை இல்லை என பேசியதாக செய்திகள் வெளியானது.
தனித்து போட்டியிட்டு ஆண்மையை நிரூபியுங்க Mr.நயினார் நாகேந்திரன்- அதிமுக Vsபாஜக குடுமிபிடி சண்டை!
நயினார் நாகேந்திரன் பேச்சு
அதிமுக எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படவில்லை எனவும் சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேச அதிமுகவில் ஒருவரும் இல்லை என பேசிய நயினார் நாகேந்திரன், அதிமுக மக்கள் பிரச்சினையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை எனவும் , எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
ஆண்மை இருந்தால்..
நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் திமுநயினார் நாகேந்திரன் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதிமுக ஐடி விங் நிர்வாகிகளும் இளைஞர்களும் சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு கடுமையான எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர். ஆண்மை இருந்தால் நயினார் நாகேந்திரன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆண்மை என்பது சொல்லல்ல செயல் அதிமுக தோளில் ஏறி நின்று வெற்றி பெற்ற நீங்கள் அதனை ராஜினாமா செய்துவிட்டு தனித்து போட்டியிட்டு மீண்டும் சட்டமன்றத்தில் உள்நுழைய ஆண்மை இருக்கின்றதா என வும் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மெளனம் காக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்
ஆனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசாத நிலையில், கட்சியின் அதிகாரப்பூர்வ ஐடி விங் ட்விட்டர் பக்கத்தில் மட்டும் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எது கூறினாலும் உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் பேசும் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோரும் இதுவரை நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்கு எதிர்வினையாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் அதிமுக தொண்டர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
தலைமைக்கு கோரிக்கை
கடந்த தேர்தல்களில் நோட்டாவுடன் போட்டி போட்ட கட்சி என பாஜகவை திமுக விமர்சித்து வந்த நிலையில், தற்போது நயினார் நாகேந்திரனின் பேச்சுக்குப் பிறகு அதிமுகவினரும் இந்த வார்த்தையை பிரயோகித்து வருகின்றனர். அதிமுக தயவால்தான் 4 தொகுதிகளை பாஜக பெற்றுள்ளது எனவும், நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு விளக்கம் தேவையில்லை எனவும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அதிமுகவினர் கூறி வருகின்றனர். மேலும் வருகின்ற தேர்தலில் பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டு அதிமுக தனித்துப் போட்டியிட்டால் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கைப் பெற முடியும் எனவும், எனவே தலைமை உடனடியாக கூட்டணியிலிருந்து வெளியேற்ற முடிவு எடுக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.