ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகமில்லை: ஓபிஎஸ் பல்டி! சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை என வாக்குமூலம்
ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கென்று தனிப்பட்ட முறையில் சந்தேகம் எதுவும் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் தனக்கென்று தனிப்பட்ட முறையில் சந்தேகம் எதுவும் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வம் தற்போது தனக்கு சந்தேகம் இல்லை என்று கூறி பல்டியடித்துள்ளார். பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான் அவ்வாறு கூறியதாகவும் சசிகலா வழக்கறிஞர் நடத்திய குறுக்கு விசாரணையில் கூறியுள்ளார். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுகசாமி தலைமயிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்தார்.
ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்னை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்ப முயன்ற போது அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக எதுவும் தனக்கு தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் நேற்றே வாக்குமூலம் அளித்த நிலையில் இன்று அது தொடர்பான கேள்விகளை எழுப்ப கூடாது என கூறினார்.

ஜெயலலிதாவிற் இருந்த நோய்
ஜெயலலிதாவுக்கு இருந்த வியாதி தொடர்பாகவோ, அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தான் கேள்வி எழுப்பக் கூடாதுஎனவும், வியாதி இருந்தது உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பலாம் எனவும் ஆணைய வழக்கறிஞர் வாதிட்டார். மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கும் போது முந்தைய சாட்சிகள் கூறிய கருத்துக்களை முன்கூட்டியே வழங்க வேண்டும், மேலும் மருத்துவர்களை உடன் வைத்திருக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இதனையடுத்து அப்பல்லோ வழக்கறிஞரின் குறுக்கீடு பதிவு செய்யப்பட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார். இதனை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன். பொதுவெளியில் எங்கும் நான் பேசவில்லை என்றும் கூறினார். பல கேள்விகளுக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வத்திடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜசெந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

பேட்டி கொடுத்தது சரிதானா
சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டைக் களைய வேண்டும் என்பதற்காகத் தான், ஆணையம் அமைக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சரிதானா? என்று ராஜசெந்தூர் பாண்டியன் கேட்டார் அதற்கு ஓபிஎஸ் சரிதான் என்று கூறினார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை
நான்கரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் பங்கேற்று வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா? என்று ராஜா செந்தூர் பாண்டியன் கேட்டார். அதற்கு ஓபிஎஸ், ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை, பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என்று கூறினார்.

சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவித சதி திட்டமும் தீட்டவில்லை என்றும் கூறியுள்ளார். கர்நாடகா நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்ட போது அதைக்கேட்டு தான் அழுததாகவும் அப்போது ஜெயலலிதாதான் ஆறுதல் கூறியதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டிலோ அதற்குப் பின்னரோ ஜெயலலிதாவிற்கு எதிராக யாரும் சதித்திட்டம் தீட்டவில்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரவோடு இரவாக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. மருத்துவமனையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இதனை அடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.

மைத்ரேயன் எம்.பி
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் சந்தேகம் எழுப்பினர். அப்போதைய எம்.பி மைத்ரேயன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளதாக கூறினார். ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. 75 நாட்களாக யாரையுமே பார்க்க அனுமதி தரவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவை யாரையுமே சந்திக்கவிடாமல் தடுத்தது ஏன்? என்று புரியவில்லை. அப்பல்லோவில் இதற்கு முன்பு எந்த நோயாளியையும் இப்படி தனிமைப்படுத்தி வைக்கவில்லை.

வெண்டிலேட்டரை அகற்ற அனுமதித்தது யார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே சந்தேகம் எழுந்தது. செப்டிசீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை யாரும் பார்க்கக்கூடாது என்ற கட்டாயம் இல்லை. செப்டம்பர் 22ம் தேதிக்கும் முன்பும், அதற்கு பின்னரும் ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். திடீரென டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு, மாரடைப்பு என்று கூறினர். இதன்பிறகு உயிர் பிரியும் நேரத்தில், ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்ட, வென்டிலேட்டரை அகற்ற அனுமதித்தது யார்? பொதுவாக இந்த அனுமதியை நோயாளியின் ரத்த சம்மந்தம் கொண்டவர்கள்தான் எடுக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தது யார்? என்றும் மைத்ரேயன் சந்தேகம் எழுப்பியிருந்தார்.

பல்டி அடித்த ஓபிஎஸ்
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால்தான் ஆறுமுகசாமி ஆணையமே அமைக்கப்பட்டது. தொடர்ந்து பலமுறை தனது பேட்டிகளில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியிருக்கிறார். இன்றைய தினம் சசிகலா வழக்கறிஞர் நடத்திய குறுக்கு விசாரணையில் தனக்கு சந்தேகம் இல்லை என்றும் பொதுமக்களின் சந்தேகத்தால் விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்ததாகவும் கூறி பல்டி அடித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். ஆறுமுகசாமி ஆணையம் அழைத்ததால் விசாரணைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications