முதுகுவலி.. முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் பயணம் ரத்து..தேவர் குருபூஜையில் அமைச்சர்கள் மரியாதை
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் ஸ்டாலினின் மதுரை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா, குரு பூஜையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
பசும்பொன்னில் தேவர் குருபூஜையுடன் கும்பாபிஷேகமும் நேற்று நடைபெற்றது. விநாயகர் கோவில், சுப்பிரமணியர் கோவில், முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை செல்வார் என்று தகவல்கள் வெளியாகின. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று இரவு சென்றார். ராமச்சந்திரா மருத்துவமனையில் ஏழாவது மாடியில் உள்ள மையத்தில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது, சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பின்னர் வீடு திரும்பினார்.

முதுகுவலி
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், முதுகு வலி காரணமாக இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முதல்வருக்கு நடைபெற்ற திடீர் மருத்துவ பரிசோதனையால் சில மணிநேரங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவர்கள் அறிவுறுத்தல்
முதுகுவலி ஏற்பட்டுள்ளதால் நீண்டதூர பயணங்களை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனது மதுரை பயணத்தை ரத்து செய்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜையில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ. பெரியசாமி உள்ளிட்டவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.

முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை
கடந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கும் முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பயணம் ரத்து
ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவில் ஸ்டாலின் பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டு முதல் முறையாக முதல்வராக ஸ்டாலின் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்த ஆண்டு பசும்பொன் செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பயணம் ரத்து செய்யப்பட்டதால் தென் மாவட்ட தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications