ஏம்பா! கல்யாணம் பண்ணிட்டு அரசியல் பண்ண கூடாதா? பாசமாக கேட்ட தாயார்! திருமாவளவன் பதில் என்ன தெரியுமா?
சென்னை: திருமாவளவன் திருமணம் குறித்து அவ்வப்போது சில விவாதங்கள் மேலெழுந்து வருகின்றன. இதற்கு திருமாவும் பதிலளித்து வந்திருக்கிறார்.
இவ்வாறு இருக்கையில் திருமணம் குறித்து தனது தாய் கேட்ட கேள்விக்கு அவர் விளக்கமளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், அவரது திருமணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

விசிக
ஆதி திராவிட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக செயல்பட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. மட்டுமல்லாது தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து கூட்டு இயக்கங்களையும் முன்னெடுத்திருக்கிறது. இவ்வாறு இருக்கையில் கட்சியின் தலைவராக உள்ள திருமாவளவனின் திருமணம் குறித்து அவ்வப்போது சில விவாதங்கள் வருவதுண்டு.

திருமணம்
கருணாநிதியை சந்திக்க திருமாவளவன் வரும்போதெல்லாம், அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முறை கூறியிருந்தார். ஆனால், கருணாநிதி சொல்லி திருமா கேட்காத ஒரே விஷயம் திருமணம்தான் என்றும் அவர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திருமாவின் 60வது பிறந்தநாள் விழாவில், பங்கேற்றிருந்த ஸ்டாலின், திருமாவின் திருமணம் குறித்து பேசியிருந்தார்.

ஸ்டாலின்
அதில், "இன்றைக்கு இருப்பது போல் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நானும் திருமாவும் நெருங்கி பழகியிருந்தால் நானே அவருக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன். அது இயலாமல் போய்விட்டது. ஆனால் தற்போது கட்சியையே திருமா திருமணம் செய்துள்ளார். உங்களுக்கு தாயும் பிள்ளையுமாக இருக்கும் திருமாவை பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு" விசிக தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசியிருந்தார்.

கேள்விக்கு பதில்
இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் திருமணம் குறித்து திருமாவின் தாயார் அவரிடம் கேட்டதாகவும், அவர் அதற்கு பதில் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, "திருமணம் செய்து கொண்டு அரசியல் கட்சி நடத்த முடியாதா ? என எனது அம்மா கேட்கிறார்கள். சராசரி அரசியல் நடத்துவதற்கும், தலித் மக்களை ஒன்றிணைத்து அமைப்பாக்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது." என்று திருமாவளவன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications