“தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய பாஜக பிரமுகர்” -பிரஸ் மீட்டில் பழைய செய்தி வாசித்த திருமாவளவன்
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களின் பின்னால் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இருக்கலாம் என திருமாவளவன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 2 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க பேரணி நடத்துவதற்கு அனுமதிகோரி டிஜிபி சைலேந்திர பாபுவை திருமாவளவன் சந்தித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருப்பூரில் சில மாதங்களுக்கு முன்பு தனது காரில் யாரோ தீ வைத்துவிட்டதாக யாரோ ஒருவர் புகார் கொடுத்தார். பிறகு விசாரித்ததில் அவரே தீ வைத்தது தெரியவந்தது. அவர் பாஜக பிரமுகர்." என்றார்.

பழைய நிகழ்வுகள்
அப்போது அருகில் இருந்த கட்சி நிர்வாகியின் செல்போனை வாங்கிய திருமாவளவன், "தன் காரிலேயே பெட்ரோல் குண்டு வீசிய இந்து அமைப்பு பிரமுகர், தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பாஜக நிர்வாகி கைது, ஆள் வைத்து கத்தியால் வெட்டிக்கொண்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கைது, தன் வீட்டில் தானே தீ வைத்துக்கொண்டு பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய பாஜக பிரமுகர் கைது." என பழைய செய்திகளை வாசித்தார்.

பின்னணியில் பாஜக?
தொடர்ந்து பேசிய அவர், "இதெல்லாம் தமிழ்நாட்டின் பத்திரிகைகளில் வெளியான செய்தி. எனவே தற்போது சொல்லப்பட்ட பெட்ரோல், குண்டு வீச்சு சம்பவங்களின் பின்னால் பாஜக இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே காவல்துறை இந்த கோணத்திலும் விசாரிக்க வேண்டும்.

வன்முறை
பாஜக சமூக வலைதளங்களில் மட்டுமே அரசியல் செய்கிறது. இதை வளர்ச்சி என்று சொல்ல முடியாது. மக்களை நெருங்குவதற்காக அவர்கள் வன்முறையை தேடுகிறார்கள். எல்லா இடங்களிலுமே அவர்கள் வன்முறையின் மூலமாகவே மக்களை அணுகி இருக்கிறார்கள். மக்களுக்கு பாஜக ஆபத்து காலத்தில் உதவும் என்பதை போன்று பாதுகாப்பு அறனாக காட்டிக்கொள்ள வன்முறைகளை தூண்டுகிறார்கள்.

வெறுப்பை விதைக்கிறார்கள்
சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்புகளின் உண்மை முகத்தை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சங்பரிவார கும்பல்கள் பெரும்பான்மை அடிப்படையில் அரசியலில் வெல்ல இந்து ஒற்றுமையை பேசி முஸ்லிம் வெறுப்பை விதைக்கிறார்கள். இதை செய்யக்கூடியவர்கள் மிகவும் சிறிய அளவிலான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். ஒட்டுமொத்த இந்து சமூகமும் அப்படியல்ல." என்றார்.












Click it and Unblock the Notifications