திருமாவளவன் எங்கே.. கேள்வி கேட்ட பாஜக.. ஸ்டிரைட்டா ஸ்டாலினை சந்தித்து "அந்த" கோரிக்கையை வைத்த திருமா
திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்
சென்னை: மதவாத சக்திகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது..
பள்ளி நிர்வாகம் தரப்பில் சிலர் மாணவியை மதம் மாறக்கூறி கட்டாயப்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்தது.

தற்கொலை விவகாரம்
அந்த மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாலேயே அவர் விஷம் குடித்ததாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வந்தன. இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்... இது தொடர்பான விசாரணை, வழக்கு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் திருக்காட்டுப்பள்ளி கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களால் மதப் பிரசாரம் செய்யப்படவில்லை என்று, பள்ளிக் கல்வித் துறையின் விசாரணை அறிக்கை தெரிவித்திருக்கிறது

குஷ்பு கேள்வி
எனினும் இந்த விஷயத்தை ஆரம்பத்தில் இருந்த தமிழக பாஜக கையில் எடுத்துள்ளது..போராட்டத்தையும் முன்னெடுத்தது.. அப்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேசும்போது, "தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று யாராவது கூறமுடியுமா? தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று முதல்வர் அறிக்கை வெளியிடுவாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.. அத்துடன், எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்கும் திருமாவளவன் எங்கே போனார்? அவர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? என்றும் காட்டமாக கேட்டிருந்தார்.

மதமாற்றம்?
ஆனால், திருமாவளவன் அப்போதே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "மாணவியின் சாவுக்குக் காரணம் அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்தது தான் என்ற பொய்யானதொரு குற்றச்சாட்டைப் பரப்பி, பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகள் மேற்கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது என்றும், தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ள சனாதன சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால், உபி போல லிஞ்சிங் எனப்படும் "கும்பல் கொலைகள்' நடக்கும் மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றி விடுவார்கள் என்பதை கவலையோடும் முன்னெச்சரிக்கையோடும் சுட்டிக்காட்டுகிறோம்" என்றும் தமிழக அரசுக்கு அதில்தெரியப்படுத்தியிருந்தார்.

பேச்சுவார்த்தை
இந்நிலையில், திருமாவளவன் மிக முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக முதல்வரிடம் வைத்துள்ளார்... சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விசிகவுக்கான இடப்பங்கீடு தொடர்பாக இருவரும் ஆலோசித்துள்ளதாக தெரிகிறது.. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், முதல்வரிடம் தாம் வைத்த கோரிக்கை பற்றி கூறினார்.

வரவேற்பு
அவர் பேசும்போது, "அகில இந்திய அளவில் சமூகநீதியை காக்க கூட்டமைப்பை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்ததற்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.. தன்னுடைய சனாதன சக்திகள் கொட்டமடிக்கும் சூழலில், தமிழக முதல்வர் முன்னெடுத்துள்ள முயற்சியை வரவேற்பது நம்முடைய கடமை.. அரியலூர் மாணவி தற்கொலை விஷயத்தில் மதவாத சக்திகள் அவதூறு பரப்புகிறார்கள்.. அதை வைத்து அரசுக்கு களங்கள் ஏற்படுத்தும் வகையிலும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.. எனவே, மதவாத சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்துள்ளோம்" என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications