ஆகாஷுக்கு என்னாச்சு? நேபாளம் சென்ற தமிழக கைப்பந்து வீரர்.. ரத்த வாந்தி எடுத்து பலி-பெற்றோர் சந்தேகம்
சென்னை: நேபாளம் நாட்டில் நடைபெறும் கைப்பந்து தொடரில் விளையாடுவதற்காக சென்ற திருவஊரை சேர்ந்த வீரர் திடீரென உயிரிழந்ததாக வந்த தகவலால் அவரது பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். ஆகாஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது உடலை தமிழ்நாடு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு தாசன். இவருக்கு ஆகாஷ் (27) ஆதவன்(24) என 2 மகன்கள் உள்ளார்கள். இவருடைய மூத்த மகன் ஆகாஷ் கைப்பந்து விளையாட்டு வீரராக இருக்கிறார்.
இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி நேபாளம் நாட்டிற்கு கைப்பந்து விளையாடுவதற்காக சென்றார்.
நேபாளம் கைப்பந்து தொடர்
கோவையில் உள்ள யூத் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் அசோசியேசன் என்ற அமைப்பு மூலம் நேபாளம் நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் இருக்கும் ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் ஆகாஷ் கலந்தகொள்வதற்காக சென்று இருந்தார். இந்நிலையில் இன்று காலை முதல் சுற்று கைப்பந்து போட்டிகள் நடைபெற்று உள்ளது.
ரத்த வாந்தி எடுத்த ஆகாஷ்
இதில் ஆகாஷ் விளையாடிய அணி முதல் சுற்றில் வெற்றி பெற்று இருக்கிறது. இதனை அடுத்து அவர் விளையாட்டு மைதானத்தில் ஓய்வு எடுப்பதற்காக சென்று இருக்கிறார். அப்போது ஓய்வு அறையில் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து இருக்கிறார். இதனை பார்த்த சக விளையாட்டு வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
மரணத்தால் அதிர்ச்சி
அங்கு பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அண்னி நிர்வாகமும், சக விளையாட்டு வீரர்களும் ஆகாஷின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர் உயிரிழந்த செய்தியை தெரிவித்து உள்ளனர். தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மாவட்ட ஆட்சியரிம் கோரிக்கை
மேலும் நேபாளம் நாட்டில் உயிரிழந்த தங்களின் மகன் ஆகாஷின் உடலை தமிழ்நாடு கொண்டு வருவதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆகாஷின் உறவினர்கள் மற்றும் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு ஒன்றை அளித்தனர்.
மரணத்தில் மரணம்
அதில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த ஆகாஷின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாவும் அவரின் பிரேதத்தை உரிய முறையில் பரிசோதனை செய்து மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு ஆகாஷின் உடலை தமிழ்நாடு கொண்டு வந்து தங்களிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை
தற்போது தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கைப்பந்து வீரர் ஆகாஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கோரிக்கை முன்வைத்து இருக்கிறார்கள்.
எம்.எல்.ஏ. கோரிக்கை
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தலைமைச் செயலக செயளருக்கு தகவல் அளித்து உள்ளார். நேபாளத்தில் உயிரிழந்த கைப்பந்து வீரர் ஆகாஷின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.