ரோட்டில் செல்பவர்களை அதிமுக தலைமையாக ஏற்க முடியாது... சசிகலாவை போட்டு தாக்கும் வளர்மதி
சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் சிந்தனை எந்த ஒரு தொண்டருக்கும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் தலைமை ஒபிஎஸ், இபிஎஸ் மட்டுமே, அவர்கள் சொல்வதற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வோம் ரோட்டில் செல்பவர்களை தலைமையாக ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார். எம்ஜிஆர் கை காட்டிய இடத்தில்தான் அதிமுக தற்போது உள்ளது.
சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் சிந்தனை எந்த ஒரு தொண்டருக்கும் கிடையாது, ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தான் எங்கள் தலைமை அவர்களுடைய முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடந்து கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா அதிமுக மீட்க ஆசைப்படுகிறார். அதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும் இறுதியில் தோல்விலேயே முடிந்தது. இதனிடையே, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என்று திட்டவட்டமாக கூறிவருகின்றனர்.

டிடிவி தினகரன்
அதிமுகவை மீட்போம் சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம் என்று கூறுகிறார் டிடிவி தினகரன். சசிகலா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சியமைப்போம் என்று கூறி வருகிறார். அது ஒருபோதும் நடக்காது என்று கூறி வருகின்றனர் அதிமுகவின் மூத்த தலைவர்கள்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,' 11 மாத கால திமுக ஆட்சியில் அம்மாவின் திட்டங்களை நிறுத்தி விட்டார்கள் என மக்கள் குறை கூறுகின்றனர் என்றார். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக நிறுத்திவிட்டு அதற்கு வேறு பெயர்களை சூட்டி தங்களது செல்வாக்கை நிரூபித்து கொள்கிறார்கள். முதல்வராக எடப்பாடி கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக ஆட்சியில் கொண்டு வந்ததை போல பேசி வருகின்றனர், சுய சிந்தனையோடு திமுக ஆட்சியில் புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்பதற்கு ஒரு திட்டம் கூட இல்லை என்று கூறினார்.

உள் கட்சித் தேர்தல்
அதிமுக கட்சியில் பொறுப்பு வாங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும். அதில் தகுதியானவர்களை கட்சி தான் தேர்ந்தெடுக்கும். மேலும், மதுரை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக வந்து தேர்தல் நடத்துவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று கூறினார். பொதுமக்களை பாதிக்கின்ற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்காக நிச்சயம் அதிமுக போராட்டம் நடத்தும்.

சசிகலா அதிமுக தலைவரா?
சசிகலாவை ஜனநாயக முறைப்படி அதிமுகவின் பொதுச் செயலராக ஆக்குவோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த வளர்மதி, அதிமுகவின் தலைமை யார் என்பது சமீபத்தில் நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு மூலம் தெரியவந்துள்ளது, அவர்களை கட்சியில் சேர்ப்பதற்கான சிந்தனை எந்த ஒரு தொண்டர்களுக்கும் கிடையாது என்றார்.
Recommended Video

ரோட்டில் செல்பவர்கள்
அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்களது முடிவை ஏற்றுக் கொண்டனர், அதிமுகவின் தலைமை ஒபிஎஸ், இபிஎஸ் மட்டுமே, அவர்கள் சொல்வதற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வோம் ரோட்டில் செல்பவர்களை தலைமையாக ஏற்க முடியாது எம்ஜிஆர் கை காட்டிய இடத்தில்தான் அதிமுக தற்போது உள்ளது என்றும் கூறினார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தான் எங்கள் தலைமை. அவர்களுடைய முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடந்துகொள்வோம் என வளர்மதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications