பி.எஃப்.ஐ. காரணம்காட்டி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பதா? தமிழக அரசுக்கு பாஜக கண்டனம்
சென்னை: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது: ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது, உயர்நீதி மன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு, அவமதிக்கும் வகையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது யாரையோ திருப்திபடுத்தும் உள்நோக்கம் கொண்டது. மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் அண்மைக்காலமாக நடை பெற்று வருகின்றன எனவும், மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்திருக்கும் நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றன என்றும், அதே நாளில் வேறு சில அமைப்புகளும் சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ளதாகவும், அதனால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது.

அண்மைக்காலத்தில் ஹிந்து பெண்கள் குறித்து அவதூறு பேசி, மத உணர்வுகளை தூண்டியது தி மு க வின் துணை பொது செயலாளர் அ.ராஜா தான் என்பதை உலகறியும். ஹிந்து பெண்கள் குறித்து அவர் பேசிய தரக்குறைவான பேச்சுக்கு அவர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யாத தி மு க அரசு, அதை காரணம் காட்டி ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை தடை செய்வது கேலிக்கூத்து.

தடை செய்யப்பட்டதால் பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆப் இந்தியாவின் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால் அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கையில் இறங்காமல், அதை காரணம் காட்டி ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை தடை செய்வது, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க முடியாத மாநில அரசின் இயலாமையின் வெளிப்படுத்துகிறது.
அதே நாளில் வேறு சில அமைப்புகள் சங்கிலி தொடருக்கு அனுமதி கேட்டுள்ளது என்று அரசு குறிப்பிட்டுள்ளது, ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே அந்த அமைப்புகளை தி மு கவே தூண்டி விட்டு அனுமதி கேட்க வைத்துள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. தேச பக்தி, தெய்வ பக்தி, ஆன்மீக, கட்டுப்பாடு, நேர்மை, ஒழுக்கம் ஆகியவைகளையே உயிர்மூச்சாக கொண்ட ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை கண்டு அஞ்சி, நடுங்கி கொண்டிருக்கின்றன தி மு க உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள். அதிகாரத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்ற மமதையில் ஆட்சியாளர்கள் செயல்படுவார்களேயானால், அவர்கள் நீதியால் தோற்கடிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications