என்னதான் அரசியல் மோதல் இருந்தாலும்.. எடப்பாடிக்கு நன்றி சொல்லி பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: என்னதான் ஆவேசமாக அரசியல் செய்து ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தாலும்கூட, நீட் நுழைவுத்தேர்வு கூடாது என்ற விஷயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி ஆகியோரின் குரல்கள் இணைந்து ஒலித்துள்ளன.
அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவு வழங்கியதற்கு, எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் இன்று நன்றி தெரிவித்தார்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் நீட் விலக்கு சட்ட முன்வரைவு இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

சட்ட முன் வடிவு
சட்ட முன்வடிவை தாக்கல் செய்து பேசினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். நீட்தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. எனவே, மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மாணவர் சேர்க்கையில் 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று இந்த சட்ட முன்வடிவு தெரிவிக்கிறது என்று கூறியிருந்தார்.

வெளி நடப்பு
இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்கவில்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எடப்பாடி பழனிசாமி தாங்கள் வெளிநடப்பு செய்தது இந்த விஷயத்திற்காகத்தானே தவிர நீட்டுக்கு எதிராக கொண்டுவரப்படும் சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம் என்று உறுதிபட தெரிவித்தார்.

ஜெயலலிதா அனுமதிக்கவில்லை
இதன்படி இன்று பிற்பகல் நீட் நுழைவுத்தேர்வு சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் நுழைவுத்தேர்வு நடைபெற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தினார். இந்த தேர்வுக்கு விலக்கு பெறுவது தொடர்பாக கடந்தஆட்சிக் காலத்தின் போது மத்திய அரசை நாங்கள் வலியுறுத்தினோம் என்று தெரிவித்தார் .

உள் ஒதுக்கீடு
மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து மாநில அரசு சட்டம் நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து அமைச்சர் தான் விளக்க வேண்டும். எங்களை பொறுத்த அளவில் இந்த தேர்வு காரணமாக ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக 7.5% உள் இட ஒதுக்கீட்டை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கினோம் என்று கூறினார்.
Recommended Video

நன்றி தெரிவித்த ஸ்டாலின்
இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கு தீர்மானம் கொண்டு வந்த போது நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போதிலும், அரசியல் பாகுபாடு பார்க்காமல் ஆதரவு அளித்தோம். தற்போது நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான இந்த சட்ட மசோதாவிற்கு, அதிமுக ஆதரவு அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. நீட் தேர்வுக்கு எதிரான இந்த சட்ட முன்வடிவை அனைத்து கட்சியினரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒரு மனதாக நிறைவேறியது
அதேநேரம் நீட் விலக்கு சட்ட முன்வடிவை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்ததாக கூறி நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் , கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்ட மசோதாவை ஆதரித்தது. பாஜக அவையில் இல்லாததால் பிற அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் இந்த சட்ட மசோதாவை ஆதரித்தன. சட்ட மசோதா நிறைவேற்றியது. இந்த சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்த நிலையில் இன்றுடன் நடப்பு சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது. சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததை முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கோடநாடு விசாரணை உட்பட பல விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே மோதல் போக்கு நிலவியபோதிலும், எடப்பாடி பழனிச்சாமியை ஸ்டாலின் பாராட்டி பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications