அயோத்தி ராமர் கோவில் கட்ட வலியுறுத்தியவர் ஜெ- பூமி பூஜைக்கு வாழ்த்துகள்-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடத்தில் தற்போது ராமர் கோவில் கட்டப்பட உள்ளது.
அயோத்தியில் புதன்கிழமை காலை ராமர் கோவில் கட்டுமானத்துக்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பூமி பூஜைக்கு வாழ்த்துகள்
இதனிடையே அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 5.8.2020 அன்று நடைபெறவுள்ள பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடிக்கு வாழ்த்து
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் @PMOIndia அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலும் ஜெ. பேச்சும்
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை: 1992-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதியன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். அதேசமயம், மசூதியும் அயோத்தியில் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
இதன் மூலம், தேசிய ஒற்றுமைக்காகவும் நாட்டின் நன்மைக்காகவும் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமையை அவர் விரும்பினார் என்பது தெளிவாகிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய, அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கத்தக்க, ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து மத்திய அரசு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications