வங்க ஆளுநருக்கு எதிராக சீறிய முதல்வர் ஸ்டாலின்! குறுக்கே புகுந்த சந்தோஷ்.. ஆப் செய்த வில்சன்.. மோதல்
சென்னை: மேற்கு வங்க ஆளுநர் அம்மாநில சட்டசபையை ஒத்திவைத்தது தொடர்பாக இணையத்தில் கடும் விவாதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதை பற்றி கருத்து தெரிவித்ததை தொடர்ந்து பலர் இதில் விவாதம் செய்து வருகின்றனர்.
மேற்கு வங்க மாநில சட்டசபையை அம்மாநில ஆளுநர் ஒத்திவைத்தது தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டசபை கூட்டத்தொடரை நிறுத்துவதாக நேற்று அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கார் அறிவித்தார்.
சட்ட விதி 174 கீழ் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைப்பதாக ஆளுநர் குறிப்பிட்டு இருந்தார். நேற்று முதல்நாளில் இருந்து இது அமலுக்கு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
மாநில உரிமைகளை காக்க டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின்
கவர்னர் முடிவு
ஒரு சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது மொத்தமாக கூட்டத்தொடரை ஆளுநர் நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பின் இதை பற்றி விளக்கம் அளித்த ஆளுநர் ஜெகதீப், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்றுதான் அவர் சட்டசபை கூட்டத்தொடரை நிறுத்தியதாக கூறினார். தானாக இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டாலின் விமர்சனம்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மேற்கு வங்க ஆளுநரின் இந்த செயலை விமர்சனம் செய்து இருந்தார். அதில், நடந்து கொண்டு இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் பாதியில் நிறுத்துவது தவறானது. இது நடப்பு விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு எதிரானது. ஒரு மாநிலத்தின் "அலங்கார" உயர் பதவியில் இருக்கும் நபர், அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்தும் ரோல் மாடலாக இருக்க வேண்டும், என்று கூறி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
கவர்னர் விளக்கம்
இந்த நிலையில் இதற்கு மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் அளித்த பதிலில், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு குறித்து என்னுடைய அறிவிப்பில் தமிழக தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் கடுமையான அவதானிப்புகளை செய்து இருக்கிறார். அதில் உண்மை இல்லை. மேற்கு வங்க முதல்வரின் கோரிக்கையை ஏற்றுத்தான் சட்டப்பேரவை முடித்து வைக்கப்பட்டது என்று அவர் விளக்கம் அளித்தார். அதாவது முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு தவறானது, அதில் உண்மை இல்லை என்று ஆளுநர் ஜெகதீப் குறிப்பிட்டார்
பிஎல் சந்தோஷ் கேள்வி
இந்த மோதல் தேசிய அளவில் சர்ச்சையான நிலையில் கர்நாடகாவை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் பிஎல் சந்தோஷ் விமர்சனம் செய்துள்ளார். வாரிசு அரசியலில் ஈடுபடும் நபர்கள் எதற்கும் தயாராக இல்லை, எதுவும் தெரிந்து கொள்ளவில்லை என்பதை முதல்வர் ஸ்டாலினின் இந்த ட்வீ ட் காட்டுகிறது. கடந்த காலங்களில் இவர்கள் சொல்வதை மக்கள் நம்பிக்கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. பாவம். தமிழ்நாட்டிற்கு இதைவிட நல்ல ஆட்சி நிர்வாகம் தேவை, என்று முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்து இருந்தார்.
வில்சன் பதில்
இந்த நிலையில் பிஎல் சந்தோஷ் விமர்சனத்திற்கு திமுக எம்பி வில்சன் பதில் அளித்துள்ளார். அதில், இவர்கள் கவர்னர் கொடுத்த விளக்கத்தை சரியாக படிக்கவில்லை. முதல்வரின் ஒப்புதலுக்கு பின் அவையை ஒத்திவைப்பதாக ஆளுநர் குறிப்பிட்டு இருக்கிறார். இது அமைச்சரவையின் பரிந்துரை எங்கே பிஎல் சந்தோஷ்? உங்களுக்கு தெரியாத விஷயங்களை பேசி நீங்கள் உங்களை முட்டாள் என்று நிரூபிப்பதற்கு பதிலாக அமைதியாக இருக்கலாம், என்று பதில் அளித்துள்ளார். இவர்கள் இடையிலான மோதல் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.