நீட் தேர்வு, 16 முறை ஒன்றிய அரசு, திராவிட மாடல்-விமர்சனங்களை துவம்சம் செய்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையில் நீட் தேர்வு விவகாரம், கச்சத்தீவு பிரச்சனை, மத்திய- மாநில அரசுகள் இணக்கம், ஜிஎஸ்டி நிதி பங்கீடு, அலுவல் மொழியாக தமிழ் மொழி என அடுக்கடுக்கான கோரிக்கைகளை வைத்ததுடன் இதுதான் திராவிட மாடல் என வகுப்பெடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுகிறதோ என்கிற விமர்சனங்களை தூள் தூளாக்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இவ்வளவு பங்களித்தும் எங்களுக்கு வெறும் 1.21% தானா..?- புள்ளிவிவரம் சொல்லி பொங்கித் தீர்த்த ஸ்டாலின்!
சென்னையில் ரூ31,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் அளிக்கக்கூடிய பங்கிற்கு ஏற்ப, ஒன்றிய அரசும் - திட்டங்களிலும் நிதியிலும் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதுதான் உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியாக அமையும்! ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் மாநில அரசின் பங்களிப்பும் மகத்தானது என்றார்,
மேலும் ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் ஒன்றிய அரசின் பங்கானது, திட்டம் முடியும்வரை தொடர வேண்டும் என்றும், பயனாளிகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களில், அவர்கள் தமது பங்களிப்பை செலுத்த முடியாதபோது ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து அதனை சமமாக ஏற்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டார்.
அதேபோல் தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதை மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நான் நினைவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன் என வலியுறுத்தினார்
இறுதியாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முறையைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது குறித்து சட்டம் நிறைவேற்றி, மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கான அனுமதியை, விரைந்து வழங்கிட மாண்புமிகு பிரதமர் அவர்களை இந்தத்தருணத்தில் தமிழ்நாடு மக்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இக்கோரிக்கைகளில் இருக்கக்கூடிய நியாயத்தை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
பிரதமர் மோடி முன்னிலையில் 16 முறை ஒன்றிய அரசு என அழுத்தம் திருத்தமாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். அப்போதெல்லாம் திமுகவினர் எழுப்பிய ஆராவாரம் அடங்கவில்லை. சென்னை நிகழ்ச்சியில் முதல்வரின் உரை திமுக மற்றும் திராவிடர் இயக்கத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கும் விவகாரம், பசுக்களுக்கு ரூ20 கோடியில் மடம் அமைத்தல், பீப் பிரியாணிக்கு தடைவிதித்தல் என கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தது திமுக அரசு. இப்போது முதல்வரின் பேச்சு மூலம் இந்த விமர்சனங்கள் தகர்ந்து போயிருக்கின்றன என்கின்றனர் திமுக சீனியர்கள்.