ஸ்பெஷல் விமானத்தில் பறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்.. ‘டாட்டா’ சொல்லி வழியனுப்பி வைத்த உதயநிதி!
சென்னை : தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேர் இன்று சிறப்பு விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பயணித்துள்ளனர். மாணவர்களை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற 100 மாணவ, மாணவிகள் சிறப்பு விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட்
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்க இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கிடையே சதுரங்க விளையாட்டு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும், இத்திட்டம் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

செஸ் போட்டிகள்
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ட்ரெய்னர் கொண்டு மாவட்ட அளவில் செஸ்விளையாட்டில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு செஸ் விளையாட்டின் நுட்பங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும், பள்ளி அளவில் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகள் 1 - 5 வகுப்பு வரை, 6 - 8 வகுப்புகள், 9 -10 வகுப்பு, 11 - 12 வகுப்பு வரை என நான்கு பிரிவுகளாக நடைபெற்றன.

வெற்றி பெற்ற மாணவர்கள்
இந்த செஸ் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். பின்னர் அதில் வென்றவர்கள் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று விளையாடினர். அதிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைக் காணவும் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விமான பயணம்
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெற்ற செஸ் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 100 மாணவ-மாணவியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூர் வரை சென்று திரும்பும் வகையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் செல்லும் விமானத்தினுள் சிறப்பு செஸ்போட்டி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் விருதுகள் அளிக்கப்பட உள்ளன.

தொடங்கி வைத்த உதயநிதி
அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் 100 பேர் இன்று சென்னையிலிருந்து பெங்களூர் வரை சென்று திரும்பும் வகையில் சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் சென்ற சிறப்பு விமானத்தினை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, அமைச்சர்கள், தா.மோ.அன்பரசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மகிழ்ச்சியுடன் பயணித்த மாணவர்கள்
மாணவர்கள் அனைவரும் வெகு ஆர்வத்துடன் விமானத்தில் ஏறி அமர்ந்து, பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்கள் டாட்டா காட்டி வழியனுப்பி வைத்தனர். முன்னதாக, செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும், 'செஸ் ஒலிம்பியாட்' சின்னமான 'தம்பி' சிலையை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.












Click it and Unblock the Notifications