கிளாம்பாக்கம் வரை மெட்ரொ ரயில்.. நிலம் கையகப்படுத்த பச்சைக்கொடி காட்டியது தமிழக அரசு!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து முனையம் செயல்பட்டு வருவதால் சென்னை நகருக்குள் இருந்து கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரயில் சேவை பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு ரூ.8,445 கோடி ஒதுகீடு செய்யப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ல் தொடங்கப்பட்டது. படிப்படியாக சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-1-ல், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கையை, (Detailed Project Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. கோபாலரிடம் அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான மு.அ.சித்திக், கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பித்தார்.
மெட்ரோ விரிவாக்கம்
மெட்ரோ ரயில் மற்றும் மேம்பாலச் சாலையின் ஒருங்கிணைந்த கட்டுமானத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி, மெட்ரோ வழித்தடம் நிலை 2-ல் மற்றும் மேம்பாலச் சாலை நிலை 1-ல் முன்மொழியப்பட்டுள்ளது. இது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையற்ற சாலை போக்குவரத்து மற்றும் மெட்ரோ இணைப்பை வழங்கும். வெளிவட்டச் சாலை (Outer Ring Road) உடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப் பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.
கிளாம்பாக்கம் வரை
சென்னை விமான நிலையத்தில் இருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் மூலம் நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.
தமிழக அரசு ஒப்புதல்
இந்த மெட்ரோ விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்ப்பித்த நிலையில், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும், மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ விரிவாக்கத்துக்கான நிலத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications