கோவிட் ஒருங்கிணைந்த கட்டளை மையம்: 104GoTN ட்விட்டர் கணக்கு... படுக்கை வசதி பெற #BedsForTN ஹேஸ்டேக்
தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி பெற #BedsForTN என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தலாம். இதற்காக @104GoTN என்ற ட்விட்டர் கணக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது
சென்னை: தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன் தேவை குறித்து பொதுமக்களுக்கு உதவ கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. நோயாளிகள் படுக்கை வசதி பெற #BedsForTN என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தலாம். இதற்காக @104GoTN என்ற ட்விட்டர் கணக்கைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மற்ற துறைகள் மற்றும் இயக்குநரகங்களுடன் இணைந்து தமிழ்நாட்டின் தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில் கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை (UCC) அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள 104 சுகாதார சேவை மையத்துடன் இணைந்து அரசு மற்றும் தனியார் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை கிடைப்பது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைகளை நிர்வகிப்பதற்கான சிறப்பு மையமாக UCC செயல்படும்.
பாண்லே பாலகம்.. ரூ.5-க்கு 'செம' சாப்பாடு - 'கிளாப்ஸ்' அள்ளும் ஆளுநர் தமிழிசை
UCC மையமானது 24 மணி நேரமும் தமிழக அரசின் படுக்கை மேலாண்மையை இணைய வழி மூலம் கண்காணித்து, பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள காலி படுக்கை வசதிகளின் நிலையை அறிந்து கொண்டு அதன் மூலம் தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவும்.
104 மற்றும் 108 போன்ற ஹெல்ப்லைன் எண்களுக்கு செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தால் நிர்வகிக்கப்படும், இது மருத்துவமனை படுக்கை மேலாண்மை மற்றும் ஆக்ஸிஜன் ஆதரவு போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளது. மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள், சென்னை மாநகராட்சியின் ஆக்சிஜன் பராமரிப்பு மையங்கள் மற்றும் தனியார் துறையில் உள்ள கோவிட் பராமரிப்பு மையங்களை கண்காணிப்பதன் மூலம் படுக்கை நிர்வாகத்தை மேம்படுத்த இந்த மையம் முயல்கிறது.
தமிழக அரசு ஒருங்கிணைந்த கட்டளை மையம்
தமிழகம் முழுவதும் கொரோனாவிற்கு 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒருநாள் பாதிப்பு 6ஆயிரம் பேரை தொட்டுள்ளது. அனைவருக்கும் படுக்கை வசதி, ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
கோவிட் படுக்கை வசதிகள்
சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி உடன் ஒருங்கிணைந்து சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசு அரசு மற்றும் தனியார் சுகாதார மருத்துவமனைகளை UCC கண்காணிக்கும். கோவிட் படுக்கை வசதிகளை அதிகரிப்பதிலும், ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு UCC உடனடி சேவைகளை வழங்கும்.
ட்விட்டர் கணக்கு தொடக்கம்
கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி பெற @104GoTN என்ற ட்விட்டர் கணக்கும் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் கணக்கின் நோக்கம் தனிநபர்கள் நேரடியாக படுக்கைகளைக் கோரக்கூடிய மற்றும் உதவியைப் பெறக்கூடிய ஒரு தளத்தை வழங்குவதாகும்.
ஆக்சிஜன் படுக்கை வசதி
கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைக்காமல் திண்டாடும் உறவினர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தின் மூலமாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். ஏரளாமான மக்கள் இது போன்ற பதிவை வெளியிடுகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக தமிழக அரசு 104GoTN என்ற புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளது.
ட்விட்டரில் ஹேஸ்டேக்
நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்யும் சிறப்பு மையமாக இது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தப்படும் என்றும் மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுக்கை கிடைப்பது தொடர்பாக இவ்வசதியை பயன்படுத்தக்கொள்ளுமாறு பொதுமக்களும், மருத்துவமனைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.