“பெஞ்ச் மார்க்” நிர்ணயிக்கும் ஸ்டாலின் அரசு.. இலவச பேருந்தால் ரூ.888 சேமிப்பு! பாராட்டிய பிடிஆர்
சென்னை: தமிழ்நாடு அரசின் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தால் பெண்கள் மாதம் ரூ.888 வரை சேமிப்பதாக அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் அரசு நிதி மேலாண்மை மற்றும் கொள்கையில் புதிய அளவுகோலை நிர்ணயிப்பதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
பெண்களுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் பயணை உணர்த்தும் வகையில் புதிய ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு திட்டக்குழு வெளியிட்டு இருக்கிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நேரடி ஆய்வு பணிகள் ஆகஸ்டு 30 ஆம் தேதி வரை நீடித்து உள்ளன. இந்த பணியின்போது அதிகாரிகள் நேரடியாக மக்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்கள்.
அரிட்டாபட்டியில் அப்படி என்னதான் இருக்கிறது?- 2200 ஆண்டு வரலாற்றை காப்பாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்
3 மாவட்டங்களில் ஆய்வு
விவசாயிகள் மற்றும் மீனவர்களை அதிகம் உள்ளடக்கிய நாகப்பட்டினம் மாவட்டம், சுற்றுலா பகுதிகள் மற்றும் தொழில்கள் அதிகம் இருக்கும் மதுரை மாவட்டங்கள், தொழிற்சாலைகளை அதிகம் திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் தமிழ்நாடு மாநில திட்டக்குழு இந்த ஆய்வை மேற்கொண்டு தற்போது அதன் முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
முதலமைச்சரிடம் தாக்கல்
திருப்பூரில் அதிகபட்சமாக 437 பேரிடம் நேரடி ஆய்வு செய்யப்பட்டு உள்ளது., அடுத்ததாக மதுரையில் 422 பேரிடமும், நாகப்பட்டினத்தில் 416 பேரிடமும் என மொத்தம் 1,200 பேரிடம் திட்டக்குழு ஆய்வு நேரடி ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்து உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று இந்த ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட்டு உள்ளது.
ரூ.888 சேமிப்பு
தமிழ்நாடு திட்டக்குழு சமர்பித்த இந்த ஆய்வு அறிக்கையில் தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் ஒர் மாதத்திற்கு பெண்கள் ரூ.888 வரை சேமிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் வாயிலாக மிச்சமாகும் பணத்தை அவசிய தேவைகளுக்கும், சேமிப்புக்கும் பயன்படுத்துவதாக பெண்கள் தெரிவித்து உள்ளனர்.
முதலமைச்சரின் முதல் கையெழுத்து
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், அதே நாளிலேயே அரசு நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்ற திட்டத்திட்டுக்கு கையெழுத்திட்டார். மறுநாளே இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்து பெண்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மொத்த பயணங்கள்
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தின்படி 176.84 பயணங்கள் நடைபெற்று உள்ளன. தினசரி 39.21 லட்சம் கட்டணமில்லா பயணங்கள் இத்திட்டத்தின் மூலம் சராசரியாக நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பயனடைந்த பெண்கள்
இந்த திட்டத்தின் காரணமாக தினசரி வேலைக்கு செல்லும் சிறு குறு வியாபாரிகள், நடை பாதை வியாபாரிகள், அலுவலக பணியாளர்கள், கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பை சேர்ந்த பெண்கள் பயனடைந்து வந்தனர். குறிப்பாக பயணம் மேற்கொள்ள மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டிய தேவை இல்லாமல் பெண்கள் சுதந்திரமாக செல்லத் தொடங்கினார்கள்.
அமைச்சர் பிடிஆர்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "அரசு திட்டங்கள் மற்றும் இதுபோன்ற இலவசங்கள் என்று அழைக்கப்படும் திட்டங்களுக்கான செலவையும் அதன் மூலம் கிடைக்கும் பயனையும் மதிப்பிட இதுபோன்ற ஆய்வுகள் முக்கியமானவை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசாங்கம், இதுபோன்ற பல வழிகளில் செலவின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இருப்பதுடன், நிதிமேலாண்மை மற்றும் கொள்கைகளில் புதிய அளவுகோளை அமைக்கிறது." என்றார்.