'தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என்று சொன்னவர்தான் அண்ணாமலை'..ஆனா இப்போ?'.. விளாசிய அமைச்சர் மா.சு
சென்னை: தமிழக அரசின் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கொழுந்தனோடு கள்ளக்காதல்.. தங்கையையும் 3 குழந்தைகளையும் அடித்தே கொன்ற அக்கா! ஷாக்கில் கர்நாடகா
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்த்து தெரிவித்து வருகிறது.
நீட் விலக்கு மசோதா
தமிழக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல மாதங்களாக இதனை கிடப்பில் போட்ட ஆளுநர், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார். நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது அல்ல என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையில் நேற்று நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை
இந்த நிலையில் சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா அரசு மருத்துவமனையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதா தொடர்பாக பேசினார். இந்த முறை தமிழக அரசின் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை. நீட் விவகாரத்தில் ஆளுநர் கூறிய கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெளிவான பதில் அளித்து விட்டார் என்று கூறினார்.
அண்ணாமலை பேசியது என்ன?
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'நீட் தேர்வு தமிழகத்திற்கு அவசியமில்லை என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை கூறி இருந்தார்.
மாநில பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கல்வி திறன் அதிமாக உள்ளது அதனால் நீட் தேர்வை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது தமிழக மக்களுக்கு நீட் எதிரான இல்லை என்கிறார் என மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார்.
முடிச்சை அவிழ்ப்பார்கள்
நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக புகார் கூறிய அமைச்சர் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நம்புவதாகவும் நீட் தேர்விற்கு பாஜக போட்ட முடிச்சை அவர்களே அவிழ்ப்பார்கள் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள மாவட்டம்
கொரோனா குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 4% மட்டுமே மருத்துவமனை படுக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் சிகிச்சையில் இருப்பவர்கள் 7%, தீவிர சிகிச்சை பிரிவில் இதுவரை 7% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்று கூறினார். 87% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி திருவாரூரில்(93%), தென்காசியில் (92%) அதிகமாக உள்ளது என்றும் கூறினார். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.