10,000 முகாம்களில் ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசி ...1 கோடி தடுப்பூசி அனுப்புங்க...அமைச்சர் மா.சு. கடிதம்
சென்னை: தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி 10 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதால், கூடுதலாக ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வேக்சின் பணிகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வேக்சின் போட்டுக்கொள்ள முதலில் மக்கள் தயக்கம் காட்டினாலும், பின்னர் அந்த தயக்கம் மெல்ல நீங்கியது.

வேக்சின் பணிகள்
குறிப்பாக, கொரோனா 2ஆம் அலை சமயத்தில் வேக்சின் போட்டுக்கொள்ள மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். அப்போது தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததால் பல்வேறு தடுப்பூசி மையங்களிலும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் கூட ஏற்பட்டது. இதையடுத்து வேக்சின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பற்றாக்குறை இல்லாமல் வேக்சின் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரு கோடி வேக்சின் தேவை
வரும் செப்டம்பர் 12ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தத் தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக 1 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுக்கு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

எத்தனை பேருக்கு வேக்சின்
தமிழ்நாட்டில் தினசரி 5 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்படுவதாகவும் இதுவரை மாநிலத்தில் 2.63 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் 68.91 லட்சம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல தமிழ்நாட்டில் இப்போது 3.44 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசிக்காகவும் 18.89 லட்சம் பேர் 2ஆம் டோஸ் தடுப்பூசிக்காக காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை மாவட்டங்களுக்கு முன்னுரிமை
மேலும், தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்துள்ள 9 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அளித்து, 100% தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள தகுதி வாய்ந்த 100% பேருக்குத் தடுப்பூசி போடும் வகையில் கூடுதல் தடுப்பூசிகள் மத்திய அரசு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு இந்த மாதம் வழக்கமாக ஒதுக்க வேண்டிய 1.4 கோடி டோஸ்களைத்தாண்டி கூடுதலாக இந்த ஒரு கோடி டோஸ்களை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சு தனது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கொரோனா வேக்சின்
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, பைசர், ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் வேக்சின் செலுத்தும் பணிகளை முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் வேக்சின் பணிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications