கல்லூரிகள் திறக்கப்பட்டாலும்.. மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்.. தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் ஆன்லைன் வழியிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்த நிலையில் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு போடப்பட்டது.

ஊரடங்கு முழுமையாக ரத்து
பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது.

கல்லூரிகள் திறக்கப்படும்
மேலும், பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் கொரோனா பாதுகாப்பு மையங்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 1-ம் தேதி முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் குழப்பம்
கல்லூரிகள், தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியே தேர்வுகள் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் தேர்வுகள் எப்படி நடைபெறும்? என்பதில் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்
பிப்ரவரி 1 -ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரிகள், தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியே தேர்வுகள் நடத்தப்படும் என்றும், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆன்லைன் தேர்வு நடைபெறும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்












Click it and Unblock the Notifications