தமிழகத்தின் புதிய ஆளுநர் ரவி... நாகா பிரச்சினையை சரியாக கையாளாததால் மாற்றப்பட்டாரா?
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியைத் தமிழகத்தின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகலாந்து மாநிலத்தில் ரவி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திடீரென தமிழக ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் ஆர்.என்.ரவி.
Recommended Video
ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றியுள்ளார். கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஆகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார்.

மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். உளவுத்துறையிலும் இவர் பணியாற்றியுள்ளார். 2012ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளைத் தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார். சில ஆண்டுகள் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். நாகா குழுக்களுடனான அமைதி முயற்சியில் மத்திய அரசின் சார்பில் மத்தியஸ்தராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் மத்திய அரசுக்கும், என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்புக்கும் இடையே அமைதிக்கான வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டாலும், அந்த முயற்சி இன்னமும் இறுதிவடிவம் பெறவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்த ரவி, பல்வேறு விஷயங்களில் என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பு முரண்டுபிடிப்பதாகவும் விமர்சித்திருந்தார் ரவி.
கடந்த ஆண்டு முதல்வர் நெஃபியூ ரியோவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி எழுதிய கடிதம் சர்ச்சையை கிளப்பியது. நாகாலாந்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், ஆயுதக் குழுக்களின் ஆதிக்கத்தில் மாநில அரசு இருப்பதாகவும் எழுதியிருந்தார் ரவி. மக்களிடம் வரிவசூல் செய்துவரும் கிளர்ச்சிக் குழுக்களைத் தனது கடிதத்தில் கடுமையாகச் சாடியிருந்தார் ரவி.
உப்பு முதல் கட்டுமானப் பொருட்கள் வரை, எல்லாப் பொருட்களுக்கும் சட்டவிரோதமாக வரி வசூல் செய்யப்படுகிறது. வரி செலுத்தவில்லையென்றால், துப்பாக்கி முனையில் கடத்தப்படும் அபாயம் இருப்பதாக வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் என்னிடம் முறையிட்டிருக்கிறார்கள்.
ஆயுதக் குழுக்கள் மிரட்டிப் பணம் பறிப்பதாலும், வன்முறைச் சம்பவங்களாலும் தினக்கூலிகள், சிறு வணிகர்கள், தொழிலதிபர்கள், கடைக்காரர்கள், உணவக உரிமையாளர்கள், அரசு ஊழியர்கள் எனச் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார் ரவி. இதனையடுத்து ரவியை சந்தித்து முதல்வர் விளக்கம் அளித்திருந்தார் அது உண்மையல்ல என்றும் கூறியிருந்தார்.
இதற்கு என்எஸ்சிஎன் - ஐஎம் எனப்படும் நாகாலிம் தேசிய சோஷலிச கவுன்சில்- ஐசக் முய்வா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. முறைப்படியே மக்களிடமிருந்து வரி வசூல் நடப்பதாகத் தெரிவித்திருந்தது.
ஆளுநர் ரவி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்த காரணத்தால் என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பு கடும் கோபமடைந்தனர், "நாகா பிரச்சினையைச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் கையாள்வதில் ஆளுநர் மகிழ்ச்சியடைகிறார் என்றால், நீண்டகாலமாக இருந்துவரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அவர் பொருத்தமான நபர் அல்ல என்றே கருத வேண்டியிருக்கிறது என்றும் சாடியிருந்தது.
நாகாலாந்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, காஷ்மீர் மாநிலத்தைப் போன்ற நிலவரத்தை இங்கு ஏற்படுத்த ஆளுநர் முயல்வதாகத் தெரிகிறது. இது நாகா பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்கும் ஒருவர் செய்ய வேண்டிய விஷயமல்ல என்று நாகாலாந்து மாநில முன்னாள் அமைச்சர் வாத்ஸு மெரு விமர்சித்திருந்தது.
ஆளுநர் என்ற முறையில் ரவி தனது அதிகாரத்தைப் பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக கூறியிருந்தார். நாகாலாந்து மக்களின் பாராம்பரிய சட்ட விதிமுறைகள், நிலம், இயற்கை வளங்கள் மீதான உரிமை, மதம் மற்றும் சமூகம் சார்ந்த பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை உறுதிசெய்யும் சட்டக்கூறு 371(ஏ), அம்மாநில ஆளுநருக்கும் சிறப்பு அதிகாரங்களை அளித்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு விவகாரத்தை மேற்பார்வையிடப் போவதாகவும் கூறியிருந்த ரவி, சட்டம் - ஒழுங்கு தொடர்பான துறைகளின் முக்கிய நடவடிக்கைகள், இனி தனது ஒப்புதலுக்குப் பின்னர்தான் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
நாகாலாந்து கூட்டணி அரசில் பாஜகவும் அங்கம் வகிக்கிறது என்பதும், பிரதமர் மோடியின் அபிமானத்தைப் பெற்றவர் ஆளுநர் ரவி என்றாலும் அவர் காட்டிய அதிரடி நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. நாகா மாநில ஆளுநராக இருந்த ரவி மிகப்பெரிய மாநிலமான தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இது நாகாவில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட மாற்றம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறி வருகின்றன.












Click it and Unblock the Notifications